வியாழன், 25 அக்டோபர், 2012

தனுசுவின் கவிதைகள்...சின்னத்திரை நாயகி





குளுமையாய்ப் பொழுது புலர்ந்தது
முழுமையாய் புதுப்பொழுதும் துவங்கியது
என்
இல்லத்தரசியின்
முகம் மட்டும் மாறவில்லை!

அது
நேற்றைய நெடுந்தொடரின் தாக்கம்.
இன்னும்
அவள் நெஞ்சைவிட்டு அகலவில்லை!

அவளின்
சோகத்தையும் சந்தோஷத்தையும்
தீர்மானிப்பது
முந்தைய நாள் மெகா தொடர்களே!

அதற்குச் சாட்சி
இன்று அவளின் செயல்பாடுகள்,

தேனீர் கோப்பையின் வருகை
தெளிவாய்ச் சொல்லும் அவளின் இருப்பை!
தீய்ந்துபோன தோசை
தெரியப்படுத்தும் மீதி மனசை!

பள்ளி செல்லும் பிள்ளைக்கு
வழி அனுப்பும் தோரணை
பால்காரனின் வருகைக்கு
பதில் சொல்லும் பாவனை
பட்டு கட்டிய மேனிக்கு
அவள் செய்யும் ஜோடனை
இவைகளை
சொல்லித்தருவதெல்லாம்
இன்றைய
மெகா தொடரின் சாதனை!

காலைத் தொடர் கலகலப்பூட்டினால்
மதிய உணவு ருசிக்கும்
மதியத்தொடர் மனம் தொட்டால்
மாலை நேரம் மணக்கும்
அத்துடன்
மாமியார் உறவும் சிறக்கும்!

ஏழுக்கு "நாகம்"
ஏழரைக்கு "தாகம்"
எட்டுக்கு 'காடு'
எட்டரைக்கு "சாப்பாடு"
ஒன்பதுக்கு "அலி"
ஒன்பதரைக்கு "பத்தாம் பசலி"
பத்துக்கு "மாமியார்"
பத்தரைக்கு "சாமியார்"
பக்கத்தறையில் கணவன்
நித்திரையில் தனியாய்!

மீண்டும்
நாளை விடியும்
அதே சுழற்சி தொடரும்!
காலம் பொன் என்பதை
கட்டிக்காக்கும் தாய்க்குலம்
காலை முதல் இரவு வரை
தொலைக்காட்சி நெடுந்தொடரால்
இரும்பு மனுஷி எனப்பட்டவள்
இயந்திர மனுஷியாகிவிட்டாள்!

-தனுசு-

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

DHYANA SLOGAS FOR KANYA POOJA....கன்யா பூஜைக்கான‌ த்யான ஸ்லோகங்கள்

நவராத்திரி தினங்களில், பூஜை முடிந்த பிறகு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெண் குழந்தையை அம்பிகையாக நினைத்துப் பூஜிக்க வேண்டும்.  இரண்டு வயது முதல் பத்து வயது வரை உள்ள பெண் குழந்தைகளே இந்தப் பூஜைக்கு ஏற்றவர்களாவர். ஒவ்வொரு நாளும்,குமாரி (2 வயதுப் பெண் குழந்தை), திருமூர்த்தி (3 வயதுப் பெண் குழந்தை), கல்யாணி (4 வயதுப் பெண் குழந்தை), ரோகிணி (5 வயதுப் பெண் குழந்தை), காளிகா (6 வயதுப் பெண் குழந்தை), சண்டிகா (7 வயதுப் பெண் குழந்தை), சாம்பவி (8 வயதுப் பெண் குழந்தை), துர்க்கா (9 வயதுப் பெண் குழந்தை), சுபத்திரா (10 வயதுப் பெண் குழந்தை) என்ற திருநாமங்களால், ஒவ்வொரு பெண் குழந்தையைப் பூஜிக்க வேண்டும்.

குழந்தையை, கோலமிட்ட‌ மணைப்பலகை மீது அமர்த்தி, கால்களில் மஞ்சள் பூசி, நலங்கிட்டு, நெற்றியில் சந்தன,குங்குமத் திலகமிட்டு, பூ வைத்து,  இனிப்புப் பண்டங்களை உண்ணக் கொடுத்து, ஆடை, ஆபரணங்கள் வழங்கி மகிழ்விக்க வேண்டும். உணவளித்தல் சிறந்தது.  குழந்தையை தேவி ஸ்வரூபமாக எண்ணித் துதித்துப் பூஜிக்க வேண்டும்.
இவ்வாறு பூஜிக்கும் போது அவரவர் நாமங்களுக்கு மூல காரணமாயுள்ள  அம்பிகையைக் கீழ்க்கண்ட ஸ்லோகங்களால் தியானிக்க வேண்டும். இந்த ஸ்லோகங்கள், 'தேவி பாகவதத்தில்'இருக்கின்றன.

குமாரரூய ச தத்வானி யாரூருஜத்யபி லீலயா
காதிநபிச தேவாம்ரூதான் குமாரீம் பூஜயாம்யஹம் ||

குழந்தை விளையாட்டுப் போல், (அனைத்துலகங்களையும் ரட்சிப்பதை) யார் செய்கிறாளோ, பிரம்மாதி தேவர்கள், எந்தச் சக்தியின் லீலையால், சிருஷ்டி முதலானவைகளைச் செய்கிறார்களோ, அந்த சக்தியான குமாரியை நான் பூஜை செய்கிறேன்.

சத்யரதிபிரூ திரிமூர்த்திர் யாத்தர்ஹி நாநாரூவரூபிணி
த்ரிகால வ்யாபிநீ சக்திரூ திரிமூர்த்திம் பூஜயாம்யஹம் ||

சத்வம் முதலான முக்குணங்களால் அநேக ரூபங்களாகவும், சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்ற முத்தொழில்களைப் புரிபவளாகவும் விளங்கும் தேவி, காலை, நண்பகல், மாலை என்ற மூன்று காலங்களிலும் எந்தச் சக்தியாக வியாபித்திருக்கிறாளோ, அந்த சக்தியாகிய திருமூர்த்தியை நான் பூஜிக்கிறேன்.

கல்யாண காரிணீ  நித்யம் பக்தானான் பூஜிதாநிசம்
பூஜயாமி சதாம் பக்த்யா கல்யாணீம் சர்வகாமதாம் ||

பக்தர்களால் நித்தம் பூஜிக்கபடுபவளும், பக்தர்களுக்கு சகல மங்களங்களையும் அருளுபவளான கல்யாணியை நான் பூஜிக்கிறேன்.

ரோஹயந்தீச பீஜாநி பிராக்ஜன்ம சஞ்சிதாநிவை
யாதேவி சர்வபூதானாம் ரோஹிணீம் பூஜயாம்யஹம் ||

எல்லா உயிரினங்களின் பூர்வ கர்ம பாப வினைகளை, எந்த சக்தியானவள், நிவர்த்திக்கிறாளோ, அந்த சக்தியான ரோஹிணியைப் பூஜிக்கிறேன்.

காளிகாலயதே சர்வம் பிரஹ்மாண்டம்ஸ‌ சராசரம்
கல்பாந்ந சமயேயாதாம் காளிகாம் பூஜயாம்யஹம் ||

பிரளயகாலத்தில், அண்டங்கள் அனைத்தையும் எந்தச் சக்தியானவள் சம்ஹரிக்கிறாளோ, அந்த சக்தியான, காளிதேவியைப்  பூஜிக்கிறேன்.

சண்டிகாம் சண்ட ரூபாஞ்ச சண்ட முண்ட விநாசிநீம்
தாம்சண்ட பாபஹரிணீம் சண்டிகாம் பூஜயாம்யஹம் ||

எந்தச் சக்தியானவள், சண்டமுண்டர்களை வதம் செய்து, மஹாபாதகங்களை நிவர்த்திக்கிறாளோ, அந்த சக்தியான, சண்டியை நான் பூஜிக்கிறேன்.

அகாரணாத் சமுத்பத்திர் யந்மயை: பரிகீர்த்திதா
யஸ்யாஸ்தாம் சுகதாம் தேவீம் சாம்பவீம் பூஜயாம்யஹம் ||

தேஜோரூபமான பரமாத்மாவின் இச்சையினால், எந்த சக்தியானவள், திருவுருவங்களைத் தரிக்கிறாளோ, சுகங்களைத் தருகிறாளோ, அந்த சக்தியான சாம்பவியைப் பூஜிக்கிறேன்.

துர்க்காத்ராயதி பக்தம்யா ஸதா துர்க்கதி நாசினீ
துர்ங்ஞேயா சர்வ தேவானாம் தாம் துர்க்காம் பூஜயாம்யஹம் ||

துர்க்கதியைப் போக்குகின்றவளும், தேவர்களாலும் அறிய முடியாதவளும், பக்தர்களை ரக்ஷிக்கின்றவளுமாய், எந்த சக்தியானவள் விளங்குகிறாளோ,  அந்த சக்தியான துர்க்கையை நான் பூஜிக்கிறேன்.

சுபத்திராணி ச பக்தானாம் குருதே பூஜிதாசதா
அபத்ரநாசிநீம் தேவீம் சுபத்திராம் பூஜயாம்யஹம் ||

தன்னைப் பூஜிக்கிறவர்களுக்கு, மங்களங்களைச் செய்து, அமங்கலங்களை எந்தச் சக்தியானவள் போக்குகின்றாளோ, அந்தச் சக்தியான சுபத்திரையைப் பூஜிக்கிறேன்.

குமாரியைப் பூஜிக்க தனலாபமும், திருமூர்த்தியைப்  பூஜிக்க வம்சவிருத்தியும், கல்யாணியைப் பூஜிக்க  வித்யையும், ரோகிணியைப் பூஜிக்க நோய் தீர்தலும், காளியைப் பூஜிக்க சத்ருவிநாசமும், சண்டிகையைப் பூஜிக்க  ஐஸ்வரியமும், சாம்பவியைப் பூஜிக்க போரில் வெற்றியும்,  துர்க்காதேவியைப் பூஜிக்க, செயற்கரிய செயலை செய்து முடிக்கும் வல்லமையும், இகபரசுகங்களும், சுபத்திரையைப் பூஜிக்க, எல்லா விருப்பங்கள் நிறைவேறுதலும் கிட்டும்.

ஒன்பது நாளும் தனித்தனியே ஒவ்வொரு குழந்தையைப் பூஜிக்க இயலாதவர்கள், ஒன்பதாவது நாளான மஹா நவமியன்றோ அல்லது ஐந்தாம் நாளான பஞ்சமியன்றோ, ஒன்பது குழந்தைகளை வைத்துப் பூஜிக்கலாம்.


நவராத்திரி தினங்களில் பெண்மையைப் போற்றும் விதமாக அமைந்துள்ள கன்யா பூஜையைச் செய்து, அம்பிகையை தொழுது,

வெற்றி பெறுவோம்!!!

சனி, 13 அக்டோபர், 2012

NAVAMANGALI STHOTHRAM....நவமங்களி ஸ்தோத்திரம்


'நவமங்களி ஸ்தோத்திரம்' சர்வ மங்களங்களையும் அருளும் மகிமை வாய்ந்த ஸ்லோகமாகும். செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில், பூஜை முடிந்த பிறகு, இருவரிகளுக்கு ஒரு ஸ்லோகம் வீதம் சொல்லி ஒன்பது நமஸ்காரங்கள் செய்து நமஸ்கரிக்க எல்லா நலன்களும் உண்டாகும். நவராத்திரியில் தினமும், இந்த ஸ்லோகத்தை சொல்லி நமஸ்கரிக்க, இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞான சக்தி ஸ்வரூபிணியான, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் பரிபூரண அனுக்கிரகத்தால், எல்லா விருப்பங்களும் நிறைவேறி, பரிபூரணமான நல்வாழ்வு கிட்டும்.

காத்யாயநி மஹாமாயே பவாநி புவனேஸ்வரி|
ஸம்ஸார ஸாகரே மக்நாத் உத்தர ஸ்ரீக்ருபாமயி||

காத்யாயநி, மஹாமாயை, பவாநி, என்ற திருநாமங்களால் துதிக்கப்படும் ஹே! புவனேஸ்வரி, சம்சாரமாகிய கடலில் மூழ்கித் தவிக்கும் என்னை கரையேற்றி அருளுவாய்.

தன்யோ (அ)ஹம் அதிபாக்யோ (அ)ஹம் பாவிதோ (அ)ஹம் மஹாத்மபி: 
யத்ப்ருஷ்டம்ஸூ மஹத்புண்யம் புராணம் வேதவித்ருதம் ||

மிகுந்த புண்யங்கள் செய்திருந்ததால் அல்லவோ, ஹே தேவி, நான் உனக்கு அடிமையாகும் பாக்யம் கிடைக்கப் பெற்றேன்.

நமோ தேவ்யைப்ரக்ருத்யை ச விதாத்ர்யை ஸததம் நம: |
கல்யாண்யை காமதாயை சவ்ருத்யை ஸித்யை நமோ நம: ||

பிரகிருதி ரூபமானவளே!!, கல்விக்கு அதிபதியானவளே,  விருப்பங்களை நிறைவேற்றித் தரும் கல்யாணி!!,  விருத்தி(வளர்ச்சி)யையும், சித்தியையும் தருபவளே!!, உனக்கு நமஸ்காரம்.

ஸச்சிதாநந்த ரூபிண்யை ஸம்ஸாராரணயே நம: |
பஞ்ச க்ருத்யை விதாத்ர்யைச புவனேச்வர்யை நமோ நம: ||

சச்சிதானந்த ரூபமாக விளங்குபவளே!!, சம்சாரக் கடலே!!, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களால் உலக உயிர்களை ரட்சிக்கும் ஹே புவனேஸ்வரி, உனக்கு நமஸ்காரம்.

க்ரீடா தே லோகரசனா ஸகா தே சிந்மய: சிவ: |
ஆஹாரஸ் தே ஸதானந்த: வாஸஸ் தே ஹ்ருதயம் மம ||

மணிமுடியில், சிவபெருமானுடைய அடையாளத்தைத் தரித்திருப்பவளே!!, எப்போதும் ஆனந்தமாக விளங்குபவளே, என்னுடைய ஹ்ருதய கமலத்தில் வாசம் செய்து அருளுக.

நம: சிவாயை கல்யாண்யை சாந்த்யை புஷ்ட்யை நமோ நம: |
பகவத்யை நமோ தேவ்யை ருத்ராயை ஸததம் நம: ||

சிவமாக விளங்குபவளே(சிவனாருக்கு உடையவளே!!), கல்யாணி, சாந்தரூபமாகவும், த்ருப்தியுடனும் விளங்குபவளே!!, உனக்கு நமஸ்காரம்.

ஜயஜய ஜயாதாரே ஜயசீலே ஜயப்ரதே |
யஜ்ஞ ஸூகர ஜாயே த்வம் ஜயதேவி ஜயாவஹே ||

வெற்றிக்கு ஆதாரமாக விளங்குபவளே, வெற்றியை அருளுபவளே, வெற்றித் திருவுருவாக விளங்கும் ஹே தேவி!! உன்னை நமஸ்கரிக்கிறேன்.

ஸூகதே மோக்ஷதே தேவி ப்ரஸன்னா பவ ஸூந்தரி |
புஷ்பஸாரா ராநந்த‌நீயா துளஸீ க்ருஷ்ண ஜீவநீ||

சுகம், மோக்ஷம் ஆகியவற்றை அருளும் ஹே தேவி!!, எப்போதும், ஆனந்தமயமாக அருளுபவளே, கிருஷ்ணரையே ஜீவனாகக் கொண்டவளான ஸ்ரீ துளசியில் பிரசன்னமாக இருப்பவளே, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

நமஸ்தே துளஸீரூபே நமோ லக்ஷ்மீ ஸரஸ்வதீ |
நமோ துர்க்கே பகவதி நமஸ்தே ஸர்வ ரூபிணி. ||

துளஸீ ரூபமாக விளங்குபவளுக்கு நமஸ்காரம், லக்ஷ்மி, சரஸ்வதி, துர்க்கா பகவதி ஆகிய முப்பெருந்தேவியரின் திருவுருவாகவும், சர்வ ரூபிணியாகவும் விளங்கும் உனக்கு நமஸ்காரம்.

நவராத்திரி தினங்களில் அம்பிகையை ஆராதித்து,

வெற்றி பெறுவோம்!!!

வெள்ளி, 12 அக்டோபர், 2012

SRI DURGA ASHTOTHRA SATHA NAAMAVALI.....ஸ்ரீ துர்கா அஷ்டோத்திர சத நாமாவளி

சக்தி வழிபாட்டுக்கு உகந்த தினங்களில், புரட்டாசி மாதத்தில் வரும் 'நவராத்திரி' மிக முக்கியத்துவம் வாய்ந்தது. மகிமை பொருந்திய இந்த தினங்களில், அம்பிகையை ஆராதிக்க எல்லா நலமும் வளமும் பெறலாம். நவராத்திரியில் முதல் மூன்று தினங்கள் ஸ்ரீதுர்கா தேவியைப் பூஜிக்க வேண்டும். கலசத்திலோ, படத்திலோ அல்லது குத்துவிளக்கிலோ அம்பிகையைப் பூஜிக்கலாம். கீழ்க்கண்ட ஸ்ரீ துர்கா அஷ்டோத்திரம் சொல்லி, மலர்களாலோ, குங்குமத்தாலோ அம்பிகையை அர்ச்சித்தல் சிறப்பு.

ஓம் தேவ்யை நம:
ஓம் துர்காயை நம:
ஓம் த்ரிபுவநேச்வர்யை நம:
ஓம் யசோதா கர்ப்பஸம்பூதாயை நம:
ஓம் நாராயண வரப்ரியாயை நம:
ஓம் நந்தகோப குல ஜாதாயை நம:
ஓம் மங்கல்யாயை நம:
ஓம் குலவர்த்திந்யை நம:
ஓம் கம்ஸ வித்ராவணக‌ர்யை நம:
ஓம் அஸுரக்ஷயங்கர்யை நம:
ஓம் சிலா தட விநிக்ஷிப்தாயை நம:
ஓம் ஆகாச காமிந்யை நம:
ஓம் வாஸுதேவபகிந்யை நம:
ஓம் திவ்யமால்ய விபூஷிதாயை நம:
ஓம் திவ்யாம்பரதராயை நம:
ஓம் கட்க கேடக தாரிண்யை நம:
ஓம் சிவாயை நம:
ஓம் பாப தாரிண்யை நம:
ஓம் வரதாயை நம:
ஓம் க்ருஷ்ணாயை நம:
ஓம் குமார்யை நம:
ஓம் ப்ரஹ்மசாரிண்யை நம:
ஓம் பாலார்க்க ஸத்ருசாகாராயை நம:
ஓம் பூர்ண சந்த்ரநிபாநநாயை நம:
ஓம் சதுப் பூஜாயை நம:
ஓம் சதுர் வக்த்ராயை நம:
ஓம் பீநச்ரோணி பயோதராயை நம:
ஓம் மயூர பிச்சவலயாயை நம:
ஓம் கேயூராங்கத தாரிண்யை நம:
ஓம் க்ருஷ்ணச்சவிஸமாயை நம:
ஓம் க்ருஷ்ணாயை நம:
ஓம் ஸங்கர்ஷண ஸமானநாயை நம:
ஓம் இந்த்ரத்வஜ ஸம பாச‌'தாரிண்யை நம:
ஓம் பாத்ர தாரிண்யை நம:
ஓம் பங்கஜ தாரிண்யை நம:
ஓம் கண்டா தாரிண்யை நம:
ஓம் பாச தாரிண்யை நம:
ஓம் தநுர் தாரிண்யை நம:
ஓம் மஹா சக்ர தாரிண்யை நம:
ஓம் விவிதாயுததராயை நம:
ஓம் குண்டல பூர்ண கர்ண விபூஷிதாயை நம:
ஓம் சந்த்ர வஸ்பர்திமுக விராஜிதாயை நம:
ஓம் முகுட விராஜிதாயை நம:
ஓம் சிகிபிச்ச த்வஜ விராஜிதாயை நம:
ஓம் கௌமார வ்ரத தராயை நம:
ஓம் த்ரிதிவ பாவயிர்த்யை நம:
ஓம் த்ரிதச பூஜிதாயை நம:
ஓம் த்ரைலோக்ய ரக்ஷிண்யை நம:
ஓம் மஹிஷாஸுர நாசிந்யை நம:
ஓம் ப்ரஸந்நாயை நம:
ஓம் ஸுரச்ரேஷ்டாயை நம:
ஓம் சிவாயை நம:
ஓம் ஜயாயை நம:
ஓம் விஜயாயை நம:
ஓம் ஸங்க்ராம ஜயப்ரதாயை நம:
ஓம் வரதாயை நம:
ஓம் விந்திய வாஸிந்யை நம:
ஓம் காள்யை நம:
ஓம் மஹாகாள்யை நம:
ஓம் ஸுதுப்ரியாயை நம:
ஓம் மாம்ஸப்ரியாயை நம:
ஓம் பசு' ப்ரியாயை நம:
ஓம் பூதானுஸ்ருதாயை நம:
ஓம் வரதாயை நம:
ஓம் காமசாரிண்யை நம:
ஓம் பாப பரிண்யை நம:
ஓம் கீர்த்யை நம:
ஓம் ச்'ரியை நம:
ஓம் த்ருத்யை நம:
ஓம் ஸித்த்யை நம:
ஓம் ஹ்ரியை நம:
ஓம் வித்யாயை நம:
ஓம் ஸந்தத்யை நம:
ஓம் மத்யை நம:
ஓம் ஸந்த்யாயை நம:
ஓம் ரார்த்யை நம:
ஓம் ப்ரபாயை நம:
ஓம் நித்ராயை நம:
ஓம் ஜ்யோத்ஸ்நாயை நம:
ஓம் காந்த்யை நம:
ஓம் க்ஷமாயை நம:
ஓம் தயாயை நம:
ஓம் பந்தந நாசிந்யை நம:
ஓம் மோஹ நாசிந்யை நம:
ஓம் புத்ராப ம்ருத்யு நாசிந்யை நம:
ஓம் தநக்ஷய நாசிந்யை நம:
ஓம் வ்யாதி நாசிந்யை நம:
ஓம் ம்ருத்யு நாசிந்யை நம:
ஓம் பய நாசிந்யை நம:
ஓம் பத்ம பத்ராக்ஷ்யை நம:
ஓம் துர்காயை நம:
ஓம் சரண்யாயை நம:
ஓம் பக்த வத்ஸலாயை நம:
ஓம் ஸெளக்யதாயை நம:
ஓம் ஆரோக்ய தாயை நம:
ஓம் ராஜ்ய தாயை நம:
ஓம் ஆயுர் தாயை நம:
ஓம் வபுர் தாயை நம:
ஓம் ஸுத தாயை நம:
ஓம் ப்ரவாஸ ரக்ஷிகாயை நம:
ஓம் நகர ரக்ஷிகாயை நம:
ஓம் ஸங்க்ராம ரக்ஷிகாயை நம:
ஓம் சத்ருஸங்கட ரங்காயை நம:
ஓம் அடவீ துர்க காந்தார ரக்ஷிகாயை நம:
ஓம் ஸாகர கிரி ரக்ஷிகாயை நம:
ஓம் ஸர்வ கார்ய ஸித்தி ப்ரதாயிகாயை நம:
ஓம் துர்கா பரமேச்வர்யை நம:

வெற்றி பெறுவோம்!!!

என்று விடியும் உந்தன் குளிர் தூறும் காலம்.



எழுதுகோல் எடுத்து
எத்தனை நாளானது
என்னுள்
ஏனிந்த அமைதி?

சிறகடித்துப் பறந்த
என்
சிந்தனையில்
ஏனிந்த அசதி?
மனதில்
ஏனிந்த மந்தம்?

கற்பூரம் போல்
கண்டால் பற்றிக்கொள்ளும்
கற்பனை
எங்கே போனது
ஏனிந்த வறட்சி?

ஓடிக்களித்த வீரன்
அள்ளிக்குடிக்கும் நீர் போல்
கவிதை பாடித்தீர்த்த எனக்கு
இன்று
ஏனில்லை தாகம்!

நீலக்கடலும்
கோலமயிலும்
தாமரையும்
தடாகமும்
வீரமும்
பெருமையும்
வைத்த பந்தியில் விருந்துண்ட எனக்கு
இன்று
ஏனில்லை பசி!

தென் பட்டதெல்லாம்
பண்பாடத் தூண்டிய கண்களில்
இன்று
ஏனிந்த தூக்கம்!

அல்லது
என்னுள் ஏதும் துக்கமா?

வெண்ணிலவின்
குளிரொளி கொட்டி
என்னை ஸ்பரிசிக்கும் போதெல்லாம்
புத்துணர்வு பூத்துக்குலுங்கும்
கவிதை பாடச்சொல்லி என்னை உலுக்கும்

ஆனால் இன்று

அந்த
நீல வானம்
நீர் மேகத்திடம் மாட்டிக்கொண்டது!
வெள்ளி நிலா
வெளிவரமுடியாமல் சிக்கிக்கொண்டது!

பருவகால மாற்றம்
எனக்கு பழக்கப்பட்டும்
விரக்தி மட்டும் விலகவில்லை!

இனிமை கொடுத்த மழை
இன்று
இம்சை கொடுக்கிறது
ஆனந்த மழை
இன்று
ஆத்திரம் தருகிறது

தனிமை உலாவில்
தனி உலகம் ஆட்சிசெய்த எனக்கு
மழைக்காலம்
நீசக்காலமோ?

ஓடும் நதியை
புலரும் பொழுதை
மலரும் பூவை
ஓங்கு கவிபாட
என்று முடியும்
இந்த மழைத் தூறும் கார்காலம்.

வெண்ணிலவே....
உன்
வெளிச்சம் பட்டு
என் மந்தம் விலக
என்று விடியும்
உந்தன் குளிர் தூறும் காலம்.

-தனுசு-

செவ்வாய், 2 அக்டோபர், 2012

காந்தி ஜெயந்தி

இன்று
அண்ணலின் ஜெயந்தி.
இந்த
அழகிய  ஜோதி
அகிம்சை ஓத
அவதரித்த போதி.!

இந்த 
மூர்த்தி
விடுதலையை 
சுவாசிக்கத்   தந்த திருமூர்த்தி !

இன்றும்
வாழும் ஒரே ஆத்மா
இந்த மகாத்மா!

இந்த 
வெற்றுடம்புக்குள்
எப்படி வந்தது
அப்படி ஒரு அமைதி.
இந்த 
குச்சி உடம்புக்குள்
எப்படி வந்தது
அப்படி ஒரு வைராக்கியம்!

தடி ஊன்றியபின்பும்
தண்டியில் தடம் பதித்து
வெண்முடி வீழ்த்தினார்
நம் கொடியேற்றினார் !

இந்த
வையகம் வியக்கும் வெற்றி
இவருக்கு கொடுத்த கிரகம்
சத்தியாக்கிரகம்!

இந்த
பிதாவையும்
பாரதமாதாவையும்
பிள்ளைகள் ஒன்றுகூடி
இன்று வணங்குகிறோம்
ஜெய்ஹிந்த்!
-தனுசு-

வெற்றி பெறுவோம்!!!!