வெள்ளி, 4 ஜனவரி, 2013

தனுசுவின் கவிதைகள்.....அனுபவம் சொன்ன அசரீரி



அதிகாலை நேரம் விடிந்தும்
போர்வையும் விலகவில்லை
என் பார்வையும் திறக்கவில்லை
ஓரக்கதவின் இடைவெளியில்,

"தூங்காதே!
அனுபவிக்க அனுப்பி வைத்தால்
வெட்டியாய் கழிக்கிறாய் பொழுதை...
போ...
போய் அனுபவி
அதுதான் வாழ்க்கை" என்று
ஒலித்தது ஒரு அசரீரி!

எதை அனுபவிக்க?
கேட்டதற்கு
மீண்டும் ஒலித்தது
அசரீரி

பிறப்பை
பிழைப்பை
மழையை
மாலையை
கவிதையை
நடு நிசியை
வாச மல்லியை
கடலை
குளிரை
இளம் தளிரை
நிலவை
மேகத்தை
விளையாட்டை
வேடிக்கையை
ஆட்டத்தை
அன்பை
நட்பை
நேசத்தை
இன்னும்
அடுக்கிகொண்டே போனது
அசரீரி குரல்

இதனை
அனுபவித்து ஆவதென்ன?
பிறந்த பயன் அடைய
ஆண்டவனைக்  காட்டு
அல்லது அவனை அடைய வழி காட்டு என்றேன்,

அதற்கு
இத்தனையும் முழு
ஈடுபாட்டோடு அனுபவி
அதில்
நீ சொன்ன அவனைக்  காணலாம் என்றது
அசரீரி குரல்.
-தனுசு-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக