வியாழன், 20 மார்ச், 2014

SUTTRULA POREENGALAA.?!!!....சுற்றுலா போறீங்களா?!!!!..


வணக்கம் அன்பு நண்பர்களே!....

எல்லாரும் நலமா இருப்பீங்கன்னு நினைக்கறேன்.. பசங்களுக்குப் பரீட்சையெல்லாம் முடிஞ்சிருக்கும்.. சிலருக்கு இன்னும் ஒரு வாரத்தில் முடியலாம்.. 

லீவுக்கு எங்காவது சுற்றுலா போக ப்ளான் வச்சிருக்கீங்க தானே...

எங்கெங்கே போகணும்.. எப்படிப் போகணுங்கறதெல்லாம் ப்ளான் பண்ணிட்டீங்களா.. இல்லன்னா இப்பவே ஸ்டார்ட் பண்ணுங்க.. என்னாலான டிப்ஸ் இதோ..

1. தனிப்பட்ட முறையில் செல்வதென்றால்,



போகும் இடங்கள், போக வர டிக்கெட் ரிஸர்வேஷன், தங்கும் இடங்கள், சுற்றிப் பார்க்கும் இடங்கள், அவற்றுக்குச் சென்று வர உள்ளூர்  போக்குவரத்து என எல்லாமும் தெளிவாக ப்ளான் செய்ய வேண்டும்..கன்னா பின்னா மன்னா தென்னா கால்குலேஷன் இன்பச் சுற்றுலாவை, இம்சைச் சுற்றுலாவாக்கி விடும்..

2. பெஸ்ட் ஐடியா, தரமான டிராவல்ஸ்களின் மூலம் புக் செய்து கொண்டு செல்வதுதான்.. மேலே சொன்ன விஷயங்கள் எல்லாம் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.. தரமான உணவும் கிடைக்கும்..

3. பாரத் தர்ஷன் டூரிஸ்ட் டிரெயின், குறைந்த கட்டணத்தில் தரமான சேவை வழங்குகிறது.. நெட்டிலேயே தகவல்கள் தருகிறார்கள்.. 

4. தனிப்பட்ட முறையில், குடும்பத்துடன் செல்கிறீர்கள் என்றால், போகும் இடத்தில் உறவினர் வீடுகளில் தங்குவதை விடவும் ஹோட்டல்களில் தங்கிக் கொண்டு, உள்ளூர் உறவினர் வீடுகளுக்கு விசிட் அடிப்பதே சாலச் சிறந்தது.. அந்தக்காலம் மாதிரி, இப்போது, விருந்தினர் வருகை விரும்பப்படுவது குறைவு.. நேரப் பற்றாக்குறையால், கவனிப்பது, உணவளிப்பது எல்லாம் சிரமம்.. ஒரு கிஃப்ட் வாங்கிக் கொண்டு, ஒரு வேளை உணவு அல்லது டீ டைமுக்குச் சென்று வருவதையே இப்போதெல்லாம் விரும்புகிறார்கள்....

5. மிகவும் பாசக்கார உறவுகள் என்றாலும்.. போய்த் தங்கிக் கொண்டு, அங்கு இருப்பவர்களை சிரமப்படுத்தாமல், நேரத்தோடு வெளியே போய், இரவு மிக லேட் ஆகாமல் திரும்புவதே சிறந்தது.. தங்கும் வீட்டில் வாண்டுகள் இருந்தால் அவர்களையும் கூட்டிக் கொண்டு போவது உங்கள் மீது நல்லெண்ணத்தை ஏற்படுத்தும்.. வீட்டு வேலைகளிலும் முடிந்த உதவிகள் செய்யுங்கள்.. எல்லாவற்றிற்கும் மேலாக, திரும்பி ஊர் வந்தவுடன், ஒரு கடிதம் அல்லது இமெயில் செய்து நன்றி தெரிவியுங்கள்..

6. எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம் செய்யும் சுற்றுலா பற்றிச் சொல்கிறேன்..

நெருங்கிய உறவினர்கள் குடும்பமாக, ஐந்தாறு குடும்பத்தைச் சேர்த்துக் கொள்வார்கள்.. குறைந்த பட்சம் முப்பது பேர்..மூன்று மாதம் முன்பாகவே டிக்கெட்டுகள் புக் செய்வார்கள்.. போகும் இடத்தில், ஹோட்டல்களில் தங்காமல், சின்ன மண்டபம் போலவோ அல்லது குறைந்த வாடகையில் பெரிய ஹால் போலவோ இடம் பார்த்துத் தங்குவார்கள்.. கையோடு கொண்டு சென்றிருக்கும் மூன்று நான்கு எலக்ட்ரிக் குக்கரில் சாதம் வடித்து, ரெடிமிக்ஸ் சேர்த்து, தயிர் பாக்கெட்டுகள், ஊறுகாய், சிப்ஸ் வகையறாவுடன் சாப்பாடு முடிப்பார்கள்.. ஒரு வேளை டிபன் மட்டும்  வெளியில் சாப்பிடுவார்கள்.

ஒரு வேன் வாடகைக்கு எடுத்துக் கொண்டு சுற்றிப் பார்ப்பார்கள்.. திரும்புவார்கள்..செலவுகளை, ஒவ்வொருவருக்கும் இவ்வளவு என்று சமமாகப் பங்கிட்டுக் கொள்வார்கள்..

அதிகம் செலவு பிடிக்காமல், உறவுகளையும் வளர்க்கும் இம்மாதிரி இன்பச் சுற்றுலாக்கள்.

7. டூருக்கு எப்படி பாக்கிங் செய்வது என்றெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.. குழந்தைகளுடன் செல்லும் போது, மறக்காமல், போன் நம்பர், வீட்டு அட்ரஸ் எழுதப்பட்ட அடையாள அட்டைகள் அல்லது ஸ்கூல் ஐடியை கழுத்தில் மாட்டுவது உசிதம்.. பொது இடங்களில் கிடைப்பதை வாங்கி சாப்பிடக் கொடுக்காமல், கையோடு தின்பண்டங்கள் கொண்டு சென்றால் பர்ஸூக்கும் குழந்தைகள் உடம்புக்கும் ரொம்ப நல்லது..

8. ஒரு நோட்டில், போகும் இடங்கள், அது குறித்த முக்கியத் தகவல்கள் எல்லாம் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.. பிற்பாடு கட்டாயம் உதவும்.. உங்களுக்கு நெருங்கிய யாரேனும் அந்த இடங்களுக்குச் சென்றால், அவர்களுக்கு உதவும் தகவல்களை நீங்கள் தரலாம் அல்லவா!...

9. சுற்றுலா செல்லும் இடங்களில், முக்கியமாகப் பார்க்க வேண்டிய இடங்கள் குறித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.. முறையாக நேரம் ஒதுக்கி,கவனமாகப் பாருங்கள்.. திரும்ப ஒரு முறை வருவதற்கு, சந்தர்ப்பம் வாய்க்குமோ என்னவோ... அவசரமாகவோ மேலோட்டமாகவோ பத்து இடம் பார்ப்பதை விடவும், நிதானமாக, நன்றாக ஐந்து இடம் பார்ப்பது மேல்..

10. டிராவல்ஸ்களில் செல்லும் போது, சக பயணிகளிடம் உறவை வளர்த்துக் கொள்ளுங்கள்.. தாராளமாக உதவி செய்யுங்கள்.. அடுத்தவருக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதாக எல்லாம் வேண்டாத எண்ணங்களை வளர்த்துக் கொண்டு குமையாதீர்கள்..மற்றவர்கள், உங்களுடன் விவாதத்துக்கு வந்தாலும், அழகாகத் தவிர்க்கப் பாருங்கள்.. வார்த்தைகளின் கடுமை, நிச்சயம்  நம் நிம்மதியைக் குலைத்து, அந்த நாளின் அழகையே கெடுத்து விடும்..

11. கூடுமானவரை, பொருட்களை வாங்கிக் குவிப்பதைத் தவிர்க்கப் பாருங்கள்.. எல்லா இடத்திலும் எல்லாப் பொருட்களும் கிடைக்கின்றன.. மிக முக்கியமான நினைவுப் பரிசுகள் போதும்.. அவையும் கண்ணாடி மாதிரி உடையும் பொருட்களால் செய்யப்படாமல் இருந்தால் நல்லது..லக்கேஜூகளை ஏற்றும் போதும் இறக்கும் போதும் எவ்வளவு தூரம் பார்த்துச் செய்வோம் என்று கணிக்க முடியாது.....

12. எத்தனை திட்டமிட்டாலும், சில கசப்பான சம்பவங்கள் நேரிடுவதைத் தவிர்க்க முடியாது.. அவையும் வாழ்க்கையில் ஒரு பகுதி தான் என்ற உணர்வோடு அவற்றை மனதில் இருந்து விலக்கப் பாருங்கள்... அவற்றையே சிந்தித்துக் கொண்டு, மற்ற இன்பங்களை இழக்காதீர்கள்.. சில அசௌகரியங்களைப் பொருட்படுத்தாதீர்கள்..

13. டூர் கிளம்பும் முன்புஇறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டு செல்லுங்கள்.., டூர் சென்று வந்த பின்பும், இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.. நீங்கள் போய் வரும் வரை உங்கள் வீட்டைப் பார்த்துக் கொண்ட அக்கம்பக்கத்தாருக்கு நினைவுப் பரிசோடு சென்று நன்றி சொல்லி மகிழ்வியுங்கள்..(என்னதான் பார்த்துக்கிட்டாலும், விலையுயர்ந்த பொருட்களை வீட்டில் வைக்காமல், லாக்கரில் தானே வச்சிருந்தீங்க!!).

14. நல்ல விதமா டூர் போயிட்டு வந்தப்புறம், மறக்காம எனக்கு மெயில் பண்ணுங்க என்ன?!!.. ஆல் த பெஸ்ட்!!!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!..

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

4 கருத்துகள்:

  1. அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள டிப்ஸ்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி டிடி சார்!..

      நீக்கு
  2. ....ஹோட்டல் களில் தங்கிக்கொண்டு நண்பர்கள் வீட்டுக்கு விசிட் செய்ய சொல்வது .... பெங்களூர் வருபவர்களுக்கு முன் ஜாக்கிரதை செய்தி போல் தெரிகிறது.

    சுற்றுலா டிப்ஸ் ஓகே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடவுளே!.. சொந்த அனுபவத்தில் சொல்லப் போக, அது இப்படி வேற அர்த்தம் ஆகுதா!.. உங்க சகோதரி வீட்டில் எப்போதும் உங்களுக்கு வரவேற்பு உண்டு!.. ஓகேயா!..மிக்க நன்றி சகோதரரே!!..

      நீக்கு