| படம் நன்றி: கூகுள் படங்கள். |
முந்தைய பதிவின் தொடர்ச்சி....
சங்கல்பத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்பாக, 'வேணி தானம்' பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில், பெண்கள், 'பூ முடி' கொடுப்பது என்று ஒரு வழக்கம் உண்டு. பொதுவாக, நம் பாரம்பரியத்தில், பெண்கள் முடியிறக்குவது கிடையாது. அதற்குப் பதிலாக, நீண்ட தலைப்பின்னல் (இருந்த காலத்தில்) பின்னி, பின்னலில் பூ சுற்றி, பின்னல் நுனியில் கொஞ்சம் கத்தரித்து, இறைவனுக்குச் சமர்ப்பிப்பார்கள். சிலர், தலை முடியில் குறிப்பிட்ட அளவு (உ.ம், ஒரு சாண் என்று வைத்துக் கொள்ளலாம்)சமர்ப்பிக்கிறேன் என்று வேண்டுதல் செய்து கொண்டு, அந்த அளவுக்கு முன்பு வரை பின்னலில் பூ சுற்றிக் கொண்டு, மிகுதிப் பின்னலைக் கத்தரித்து சமர்ப்பிப்பார்கள்.
இதுவே பிரயாகை திரிவேணி சங்கமத்தில், 'வேணிதானம்' என்று சொல்லப்படுகிறது. பிரயாகையில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் ஒன்று கூடுகின்றன. கங்கையும் யமுனையும் வெளிப்படையாகவும், சரஸ்வதி அந்தர்வாஹினியாக(கண்களுக்கு வெளிப்படையாகத் தெரியாமல், கீழ்மட்டத்தில்)வும் ஒன்று கூடுவதால் அந்த இடத்திற்கு திரிவேணி சங்கமம் என்று பெயர்.
தலைப்பின்னல் வெளிப்படையாகப் பார்க்கும் போது, இரண்டு கால்கள்(பிரிவு) மட்டுமே இருப்பதாகத் தோன்றும். உண்மையில், மூன்று கால்கள் கொண்டே தலைப்பின்னல் பின்னப்படுகிறது. அதனால், பெண்களின் பின்னலில் சிறிது சமர்ப்பிப்பது மிகப் புனிதமானதாக, பெண்களுக்கு சௌமாங்கல்யத்தை அருளும் மகிமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
கணவனுடன் நீடித்த மணவாழ்வு மற்றும் எப்பிறவி எடுத்தாலும் அதே கணவன்/மனைவியையே வாழ்க்கைத் துணையாக அடையும் பொருட்டும் வேணிதானம் செய்யப்படுகிறது (நல்லா ஞாபகம் வச்சுக்குங்க).
பிரயாகை க்ஷேத்திரத்தில் செய்யும் சிறிய அளவு தானமும் கோடி மடங்குப் புண்ணியப் பலனைத் தர வல்லது. இங்கு வேணி தானம் செய்வதால், பெண்களின் ஜென்மஜென்மாந்திரப் பாவங்கள் யாவும் தீர்ந்து நல்ல நிலையை அடைவார்கள்.
'தீர்த்த ராஜா' என்று சிறப்பிக்கப்படும் பிரயாகையை, இந்திரன் காவல் காப்பதாக ஐதீகம். 'அக்ஷய வடம்' என்னும் சிறப்பு வாய்ந்த ஆலமரத்தின் மூல வேர் பிரயாகையில் உள்ளது. நடுப்பகுதி காசியிலும், நுனிப்பகுதி கயாவிலும் உள்ளது. இந்த மூன்று க்ஷேத்திரங்களிலும் இதைத் தரிசிப்பது மிகவும் முக்கியம்.
சில எதிர்பாராத காரணங்களால், நாங்கள் பிரயாகையில் அக்ஷயவடத்தை, சற்றுத் தூர நின்றே தரிசித்து வந்தோம்.
வேணி தானத்தின் முக்கியத்துவம் பற்றி அறிந்து கொண்டோம். இனி, வேணி தான சங்கல்பத்தைப் பற்றிப் பார்க்கலாம்.
'தேவரீர்!!(அதாவது கணவர்), நான் ஏதாவது குற்றங்குறைகள் செய்திருந்தால் அதை மன்னித்து விடுங்கள். தங்களை, நான் கோபத்தில் ஏதாவது எதிர்த்துப் பேசி இருக்கலாம். அழைத்தவுடன், ஓடி வராமல் அசிரத்தையாக இருந்திருக்கலாம். தங்களுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளில் ஏதேனும் குறை வைத்திருக்கலாம். தங்களைப் பற்றி வெளியாட்களிடம் மரியாதைக் குறைவாகப் பேசி இருக்கலாம். குடும்ப ஆண்களைத் தவிர வெளி ஆண்களிடம் பேசி இருக்கலாம்.....(இப்படி இன்னும் கொஞ்சம்..) இவ்வாறெல்லாம் நான் செய்த குற்றங்களுக்கு மன்னிப்பு வேண்டியும், தீர்க்க சௌமாங்கல்யத்துக்காகவும் , அடுத்தடுத்த பிறவிகளிலும் தங்களையே கணவராக அடையும் பொருட்டும், நான் வேணி தானம் செய்கிறேன்'
இந்த சங்கல்பம் மிகப் பழங்கால நடவடிக்கைகளை ஒட்டி வழங்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. இக்கால கட்டத்தில், பெண்களின் நிலையை வைத்துப் பார்க்கும் போது, இது எவ்வளவு தூரம் பொருந்தி வருகிறது என்பது சர்ச்சைக்குரியதாகவே படுகிறது. மேலும் இதைக் கேட்ட கணவன்மார்களில் பெரும்பாலோர் சிரித்ததன் காரணம் யாமறியோம் பராபரமே!!!
இருகைகளையும் கூப்பியபடி, இவ்வாறு கூறி முடித்து, கணவரை விழுந்து நமஸ்கரித்த பின், பிரயாகை க்ஷேத்திரம் சம்பந்தப்பட்ட புராணங்கள், க்ஷேத்திர மகிமை முதலானவற்றை அங்குள்ளவர் விரிவாக விளக்கினார். மேலும்,வேணி தானம் செய்ய வேண்டிய முறை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
டப்பாவில் வைத்திருக்கும் 'வேணி மாதவருக்கு' பூக்கள் போட்டு அர்ச்சனை செய்த பின், அதை திரிவேணி சங்கமத்தில் கரைக்கும் முறையைப் பற்றித் தெரிவிக்கப்பட்டது. திரிவேணி சங்கமத்தில் ஸ்நானம் செய்யும் முறையையும் தெரிவித்தார்கள்.
டப்பாவில் வைத்திருக்கும் 'வேணி மாதவருக்கு' பூக்கள் போட்டு அர்ச்சனை செய்த பின், அதை திரிவேணி சங்கமத்தில் கரைக்கும் முறையைப் பற்றித் தெரிவிக்கப்பட்டது. திரிவேணி சங்கமத்தில் ஸ்நானம் செய்யும் முறையையும் தெரிவித்தார்கள்.
தங்களுக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ள முறத்தில் இருக்கும் மஞ்சள் குங்குமம், மலர்கள், சீப்பு கண்ணாடி இவற்றோடு வேணி தானம் செய்ய பிரயாகை கிளம்பினார்கள் தம்பதியர்கள் (தாம்பூலம் கொடுத்த பிறகு மங்கலப் பொருட்கள், ரவிக்கைத் துணி தவிர, மீண்டும் முறத்தில் வைக்கப்பட்டன). என் கணவர் காசியில் வந்து சேர்ந்து கொள்வதாகப் பயணத் திட்டம் இருந்ததால், நான் 'ஸ்நான சங்கல்பம்' மட்டும் தான் செய்ய முடிந்தது. தம்பதிகள் எல்லோரும் கிளம்பியதும், நான் என் மாமனார், மாமியார் முதலானோரை நமஸ்கரித்து விட்டு, கூடச் சேர்ந்து கொண்டேன் (மேற்படி சங்கல்பம் வீட்டில் தெரிந்ததும், 'வட போச்சே' என்றது வேறு விஷயம்).
அடுத்த பதிவில் பிரயாகைக் கோவில்கள் பற்றியும், திரிவேணி சங்கம ஸ்நானம் பற்றியும். (தொடரும்...)
சிவனருளால்,
வெற்றி பெறுவோம்!!!
அன்புடன்,
பார்வதி இராமச்சந்திரன்.
சிவனருளால்,
வெற்றி பெறுவோம்!!!
அன்புடன்,
பார்வதி இராமச்சந்திரன்.

