புதன், 26 ஜூன், 2013

எண்ணத்தால் வாழ்வு வரும்!!!


நாம் பெத்த ஓவியமே
நடந்து வரும் பூந்தேரே
பூதலத்து ராசாவே
புன்சிரிக்கும் ரோசாவே
எம்மடியில அதிசயமா
வந்துதிச்ச சூரியரே
பொன்னான ஒன் வாழ்வு
கண்ணு முன்ன தோணுதய்யா!!

தங்கத்தால் அரமணையாம்
தகதகக்கும் கோவுரமாம்
கருந்தேக்குக் கதவுகளாம்
கண்மூடா காவலுண்டாம்
கோட்டை மதிலு தாண்டி
கோமகனார் வாசலிலே
காத்திருக்கும் கோடி சனம்
கண்ணார உனைப் பார்க்க‌

வெள்ளியிலே வீதிகளாம்
வீதியெல்லாம் ரத்தினமாம்
முத்து நவரத்தினத்தைக்
கொட்டி அங்கே விப்பாகளாம்
முத்தத்தில் (முற்றத்தில்) முந்நூறு 
முழுப்பவளக் கோலமிட்டு
மாணிக்கம் நிறைப்பாராம்
மகராசன் வருகைக்கு

கண்ணா உன் முகம் பாத்தா
காணாத வாழ்வு வரும்
கங்கை  வீட்டு வாசல் வரும்
கனவெல்லாம் நனவாகும்
கலகலன்னு நீ சிரிச்சா
மளமளன்னு முத்துதிரும்
 தங்கமே நீ நடந்தா..
தங்கத்தேரு ஆடி வரும்.

 எட்டடிக் குடுசக் குள்ள‌ 
ஏந்தான் பொறந்தோமின்னு
என்னைக்கும் நெனக்காதே
எந் தங்க ராசாவே!!
இருளெல்லாம் வெடிஞ்சு வரும் 
ஏழைக்கும் காலம் வரும்
எம் மகனே நீ  நெனைக்கும்
எண்ணத்தால் வாழ்வு வரும்!!!

-பார்வதி இராமச்சந்திரன்.-

நன்றி: வல்லமை மின்னிதழ்.
படம் நன்றி: கூகுள் படங்கள்.
வெற்றி பெறுவோம்!!!

செவ்வாய், 18 ஜூன், 2013

தனுசுவின் குறுங்கவிதைகள்....


அன்புச் சகோதரர் திரு.தனுசு குறுங்கவிதைகள் எழுதுவதிலும் வல்லவர். அவரது குறுங்கவிதைகள் சிலவற்றை 'ஆலோசனை தொகுப்பில்' வெளியிட அன்புடன் இசைந்துள்ளார். இதோ அவரது குறுங்கவிதைகளில் சில இங்கு...

அனிச்சை செயல்

அன்று
பத்தாம் வகுப்பு படிக்கும் போது
இயற்பியலில்
"அனிச்சை செயல்" பற்றிய பொருள் விளங்காது

இன்று
இளம் நங்கைகள்
என்னை கடந்து போகயில்
என்
இளந்தொந்தி
என்னையறியாமல்
உள் வாங்கும் போது
அந்த
அனிச்சை செயலின் பொருள் விளங்கியது.
 =======================


மெழுகுவர்த்தி....

தாத்தாவுக்கு
தொண்ணூறாவது பிறந்த நாள் விழா!
சுற்றிலும் குடும்பத்தார்
கேக் வெட்ட அழைத்து வந்தோம் அவரை

அந்த பாச மிகு காட்சியைப் பார்த்து
ஏற்றி வைத்த
மெழுகுவர்த்தியும்
ஆனந்தக் கண்ணீர் விட்டது...
==========================

திருநங்கை

பிரம்மா
இனி நீ
இரவில்
ஓவர் டைம் பார்க்காதே
பார்
நீ பணிச்சுமையால்
செய்திருக்கும் குழப்பத்தை.
 =====================================

-தனுசு-

திங்கள், 17 ஜூன், 2013

நாம் பெத்த ராசா....


தவமாத் தவமிருந்து
தருமராசர் நோம்பிருந்து
பூமிதி தா(ன்) மிதிச்சி
பூச்சட்டி கையேந்தி
பலநாள் பொறுத்திருந்து
பாதகத்தி பெத்த மகெ(மகன்).
பெத்தவ மொகம் பாக்க‌
எப்பத்தா வருவானோ?

 பொன்னேதுங் கேக்கலையே
பொடவ கூட கேக்கலையே
கண்ணால ஒரு வாட்டி
பாக்கத்தான் துடிக்கிறேனே
பணங்காசு கேக்கலயே
பழய சோறுங் கேக்கலயே
 பாவி மவ‌ ஒம் மொகத்த‌
பாக்க நெதம் தவிக்கிறேனே

அரக்கஞ்சி நாங் குடுச்சு
அருமயா வளத்தெடுத்தே
பூவடிச்சா நோகுமுன்னு
பொத்திப் பொத்தி பாத்திருந்தே
ஒன்னப் பிரிஞ்சிருக்கும்
ஒரு காலம் வருமின்னு
ஒரு நாளும் நெனக்கலயே
ஒரு பேருஞ் சொல்லலையே
  
பணங்காசு வந்துப்புட்டா
பழசெல்லா மறந்திருமா
புதுசாக ஒறவு வந்து
புத்தியத்தா கெடுத்திருமா
ஆத்தாவ வேண்டான்னு
 அரமனசா நீ நெனச்சிரலாம்
அரும மகெ(ன்) வேண்டான்னு
எ ஆவி கூட நெனக்காதே

கண்ணீரு மழ கொட்ட‌
காத்திருக்கே எம் மகனே
புண்ணியமாப் போகுமப்பு
பூ மொகத்தக் காட்டிப்புடு
போக் காலம் வந்து நா
போன தடம் மறயுமுன்ன‌
பூ லோக மகராசா
பெத்த என்ன பாத்துப்புடு.

சமீபத்தில் ஒரு கிராமத்தில், தன் வாழ்வின் இறுதியை நெருங்கும் ஒரு ஏழைத்தாய், தன் மகன் வந்து பார்ப்பதில்லை என மனம் உருகும் வண்ணம் அழுததைக் கண்டேன். ஆதரவற்ற அன்னையர் எத்தனையோ பேர்...   அவ்வாறு ஆதரவற்று இருப்போரைக் கண்டால், ஒன்றிரண்டு ஆறுதல் வார்த்தைகளேனும் சொல்வோம் நண்பர்களே!!!!


அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

வெற்றி பெறுவோம்!!

நன்றி: வல்லமை மின்னிதழ்.
படத்துக்கு நன்றி:கூகுள் படங்கள்.

புதன், 29 மே, 2013

நீ வரு நாளப் பாத்திருக்கேன்.......



கொதிக்கிற வெயிலிலே கூலி வேல நாம்பாத்து

கொண்டார காச கேட்டு கன்னத்துல அடிக்கிறியே

வடி கஞ்சி கடங்கேட்டு வாங்கிக் குடிச்சுப்புட்டு

ஒம் பிள்ள படுத்திருக்கே  ஒனக்கிது தா(ன்)  தெரியலயா?


பச்ச புள்ள மடியிருத்தி பால் கொடுக்குற வேளையிலே

எச்சி துப்பி அடிக்கிறியே எட்டி நீயும் மிதிக்கிறியே

கத்தி  கதறி அலறுகிற கைப்பிள்ள முகம் பாத்து

குத்தி மனச‌ பிடுங்குதய்யா எ வயிறு கொதிக்குதய்யா


நாலு வருச முன்ன நா வாழ்ந்த பவுச கண்டு

நாலூரு சீம எல்லா(ம்) நாம் போனா மதிப்பாக‌

நாம் பொறந்த ஊருலயும் நாம் புகுந்த வூட்டிலயும்

எம் போல வாழணுன்னு எப்பவுந் தா வாழ்த்துவாக‌


எரிஞ்ச கண்ணு பட்டு எம் பொழப்பு போச்சுதய்யா

எங்கிருந்தோ வந்த குடி எங்குடியக் கெடுத்ததய்யா

எட்டூரு விட்டெறியும் எ ராசா பேரு சொன்னா

பட்டுன்னு தள்ளி வுட்டுப் பாத்திருச்சே இந்தக் குடி!!


எம்புட்டோ சொன்னேனே!! என்ன நீயும் மதிக்கலயே

எதுத்துக் கேட்டாக்க ஒன் மனசு சகிக்கலையே

மந்திரிச்ச கோழி போல, மறுக்கா மறுக்கா நீயும்

சந்தியிலே கள்ளுக் கட போறதயும் நிறுத்தலையே


பத்திரமா பொட்டியில வச்ச நக போச்சுதய்யா

பத்திரத்த வச்சதுல பழய வீடு போனதய்யா

சத்திரத்த கட்டி வச்சு தருமஞ் செஞ்ச பரம்பரய‌

புத்தியில்லா மனுசெ ‘குடி’, கொக்கரிச்சு தின்னதய்யா


வெறுப்பு மீறிப் போய் வெசங் குடிச்சுப் போகலான்னு

வெவரங் கெட்டுப் போய் ஒரு நேரம் மயங்கிப் புட்டேன்

வெனயம் இல்லாத எம் பிஞ்சுக மொகம் பாத்து

வாழ்ந்து தே  பாப்போம்னு வீராப்பா நெனைச்சுப் புட்டேன்


இனிமேட்டும் ஒ(ன்) அடி தாங்க என்னால முடியாது

இனி பொறுத்துப் போனாக்கா ஒரு நாளும் விடியாது

ஒங் குடியும் குடுத்தனமும்  ஒரு கூட்டா சேராது

ஒன் நெனப்பு மாறலென்னா ஒறவிருக்க ஏலாது


எப்பத் தா(ன்) குடிக்காம இங்கிருக்க‌ நீ வரியோ,

தப்பாம அது வரக்கும் தவிப்போட  காத்திருக்கேன்

பாழாப் போற குடி பாதகத்த தொலைச்சுப் புட்டு

வாழ்வு வேணுமுன்னு நீ வரு நாளப் பாத்திருக்கேன்.


நட்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

வெற்றி பெறுவோம்!!!

நன்றி: வல்லமை மின்னிதழ்
படங்கள் நன்றி:கூகுள் படங்கள்.

புதன், 22 மே, 2013

தனுசுவின் கவிதைகள்....குற்றம் செய்!

ஆற்றலுக்கு ஆணையும்
அழகுக்கு பெண்ணையும்
படைத்தது இயற்கை!
சில கண்ணில்லா காமாந்தகர்களால்

இந்த ஆற்றல்
ஆணாதிக்கமாக மாறுவதால்
அசிங்கப்பட்டு நிற்கும் ஆண்களில் நானும் ஒருவன்.

கலவி
அன்பின் உச்சம்
காமம்
கலவியின் கௌரவத்தை குறைக்கும் எச்சம்.

காமத்தின் கொடுமை
அதற்கு
கண்ணில்லாமல் போனது
காலத்தின் கொடுமை
அதை
கண்மூடி பார்ப்பது

பெண்
காமத்துக்கு படைக்கப்பட்ட உடமையா?
பெண்ணினத்தை
அப்படி நினைப்பது உலகத்தின் மடமையா?

பத்து வயது பூர்த்தியாக
பத்து நாள் இருக்கும்
பள்ளி செல்லும் பிள்ளை  மீது
பள்ளியறை சுகம் காண
பாயும் வெறியனையும்..

தன் மதி தவறும் போது
தங்கையையும்
தற்காலிக தாரமாக்க
நினைக்கும்
தரங்கெட்டவனையும்.....

சுற்றமோ
சொந்தமோ
யாருமின்றி சேலையோடு செத்துக்கிடந்தால்
சுடுகாட்டிலும்
பிணத்தை புசிக்கும் கழுகையும்....

புதரென்று பொருள் கொண்டு
புறம் தள்ளாமல்
இந்த உயிர்களை
மயிரென்று வெட்டித்தள்ள மனம் கொள்வோம்!

எதிர் கொள்ள நேரிடும்
இந்த சட்டத்தை
விட்டத்தில் போட்டு
சாட்டையை சுழற்றி நாம் ஒரு விதி செய்வோம்!

காமத்தின் உச்சத்தில்
சதை மேயும் மிருகத்தை
தயங்காமல்
நாமே அழித்து
கொன்றொழிக்கும் குற்றம் செய்வோம்!!!

-தனுசு-

படம் நன்றி: கூகுள் படங்கள்.