சனி, 13 ஏப்ரல், 2013

KASI YATHRA ..PART 5, பிரயாகையின் கோயில்கள் (காசி யாத்திரை....பகுதி 5).

சென்ற பதிவின் தொடர்ச்சி.....

முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம், பிரயாகையில் பிளாஸ்டிக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆகவே, சங்கம ஸ்நானம் முடிந்து, வேணி மாதவரைக் கரைத்த பின், அந்த ப்ளாஸ்டிக் டப்பாக்களை, கரைக்கு வந்து, கரையில் இருக்கும் குப்பைத் தொட்டிகளில் மட்டும் தான் போட வேண்டும். குளிக்கும் இடத்திலேயே போட்டு விட்டு வரக் கூடாது. ஃபைன் உண்டு.

கிளம்பும் போது, தங்கியிருந்த இடத்து சமையல்காரர், 'நீங்கள் ஸ்நானம் முடிந்து வந்த பின் இங்கு தீர்த்த சிரார்த்தம் செய்ய வேண்டும். அது முடிந்து சாப்பிட மூன்று மணியாகிவிடும். ஆகவே ஓட்ஸ் கஞ்சி வேண்டுமானால் தருகிறோம்.' என்றார். ரூபாயைக் கொடுத்து, கஞ்சி வாங்கிக் குடித்து விட்டுப் புறப்பட்டோம்.

முதலில் எங்களை அழைத்துச் சென்ற இடம், நான் முன்பே சொல்லியிருந்தது போல், கங்கைச் செம்புகளை விற்கும் கடை. அங்கே, விலை விவரம் கேட்டுக் கொண்டு, செம்புகளைத் தேர்ந்தெடுத்துத் தந்த பின், அவர்கள் கொடுத்த கேன்களைப் பெற்றுக் கொண்டு, திரும்பவும் வண்டியில்(கார்) ஏறினோம்.

போகும் வழியில் முதலாவதாக நாங்கள் தரிசித்தது, ஒரு கிருஷ்ணர் கோவில். நம்மூரில் இருப்பது போல் அல்லாமல் சற்று வித்தியாசமான திருவுருவங்கள். ஸ்ரீகிருஷ்ணரும் ராதாதேவியும், அவர்களுக்கு சற்றுக் கீழே, கையில் வெண்ணையுடன் பாலகிருஷ்ணரும் திருவருள் புரிந்தார்கள். காலை நேரத்தில், மனதிற்கு இதமளிக்கும் அழகான அலங்காரம். சர்க்கரை உருண்டைகள் பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டோம். சந்நிதியைச் சுற்றி வரும்போது, மாடிப்படிகள் இருந்தன. அதில் ஏறிச் செல்லச் சொன்னார்கள். செய்தோம். மேலே சென்றால், அழகான ஸ்ரீதுர்க்கை சந்நிதி. அண்ணனும் தங்கையும் ஒரே கோவில் கொலுவிருந்து அனுக்கிரகம் செய்கிறார்கள். அங்கும் பிரகாரம் சுற்றி வந்து விழுந்து வணங்கினோம். அதிர்வலைகள் அற்புதமாக இருந்தது. தெய்வீகம் கமழும் சூழல். சந்நிதியின் முன்பாக இருந்த, தேவியின் திருப்பாதங்கள் பதிக்கப்பட்ட கல்லில், பெண்கள், நீர் ஊற்றி அபிஷேகம் செய்து, மஞ்சள், குங்குமம் வைத்து, பூ வைத்து நமஸ்கரித்தார்கள்.

நாங்களும் நமஸ்காரம் செய்து விட்டுப் புறப்பட்டோம். அதன் பிறகு நாங்கள் சென்றது ஸ்ரீ சங்கரமடத்திற்கு. நபருக்கு  ஐந்து ரூபாய்கள் வீதம் டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றோம். 

கோவில் வாசலில் ஸ்ரீ ஆதிசங்கரரது திருவுருவச் சிலையும், பிரம்மாவின் அம்சாவதாரமாகக் கருதப்படும் ஸ்ரீ மண்டலமிச்ரரின் திருவுருவச்சிலையும் இருக்கின்றன. 

இவர் பின்னாளில், ஸ்ரீசுரேஸ்வராச்சாரியார் என்ற தீக்ஷா நாமம் பெற்று, ஸ்ரீ ஆதிசங்கரரின் சிஷ்யரானார். இவரே, ஸ்ரீ சிருங்கேரி சாரதாபீடத்தை அலங்கரித்த முதல் பீடாதிபதியும் ஆவார். கோவிலின் உள்ளே, 'பாட்டமதம்'  என்று புகழ் பெற்ற மீமாம்சகத் தத்துவத்தை பரப்பிய ஸ்ரீகுமாரில பட்டருக்கும் சிலை இருக்கிறது (இவர் குறித்த செய்திகளை என் பக்தியின் மேன்மை பதிவில் காணலாம்).

முதலில் நாங்கள் தரிசித்தது தேவியின் திருக்கல்யாணக் கோலம். அருகிலிருக்கும் படிக்கட்டுக்கள் வழியாக முதல் மாடி சென்றோம். இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம் ஒன்றிருக்கிறது. பொதுவாக, எல்லாக் கோவில்களிலுமே மாடிப்படிகள் அதிகம். மாடிகள் ஏறுவது என்பதை சாதாரண விஷயமாக எடுத்துக் கொண்டு, அதற்குத் தகுந்தாற்போல், மருந்துகள், 'நீ கேப் '(knee cap ) முதலானவைகள் எடுத்துக் கொள்வது நல்லது.


முதல் மாடி ஏறியதும், அழகான ஒரு சுற்றுச் சுவர். சுவரின் வெளிப்புறம் முழுக்க,  ஸ்ரீ மூகாம்பிகை, ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீகங்கா மாதா உள்ளிட்ட அம்பிகையின் அருட்சக்திகளை விளக்கும் சிற்பங்கள். இதில் சக்திபீடங்களும் அடங்கும். சுவரைக் கடந்து சந்நிதியின் உள்ளே சென்றால், கருணை பொங்கும் விழிகளால் கடாக்ஷிக்கிறாள் அன்னை ஸ்ரீகாமாட்சி. 'அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி' என அபிராமி பட்டர் போற்றித் துதிக்கும் அம்பிகை அத்தனை அழகு. அற்புதமான ஆகர்ஷண சக்தி. மிகுந்த சிரத்தையுடன் பூஜிப்பதை உணர முடிந்தது. சந்நிதியின் உட்புறச் சுவர் முழுக்க ஸ்ரீஆதிசங்கரரின் திவ்ய சரிதத்தை விளக்கும் ஓவியங்கள்.


அங்கிருந்து, இரண்டாவது மாடிக்கான படிகள் துவங்குகின்றன. இரண்டாவது மாடியிலும் சுற்றுச் சுவர் முழுக்க, தசாவதாரம் முதலான, ஸ்ரீவிஷ்ணுவின் 108 விதத் திருவுருவங்கள். சுற்றுச் சுவர் தாண்டி உள்ளே செல்லும் முன்பாக வேணி மாதவரின் திவ்ய தரிசனம். சுற்றுச் சுவருக்கு வெளியே, சீதா,லக்ஷ்மண,ஹனுமத் சமேத ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, சிறு அளவிலான தனி சந்நிதியில் சேவை சாதிக்கிறார். சந்நிதியின் உள்ளே சென்றால் ஏழுமலை வாசன் புன்னகை பொங்கும் திருவதனத்துடன் அருட்காட்சி தந்தருளுகின்றார்.

இங்கு உட்புறச் சுவர் முழுவதும் ராமாயணக் காட்சிகளை விளக்கும் ஓவியங்கள்.

தரிசனம் முடிந்து மூன்றாவது மாடி ஏறினோம். இங்கும் வெளிப்புற சுற்றுச்சுவர் முழுக்க, ஈசனின் அருளாடல்களை விளக்கும் சிற்பங்கள். சந்நிதியின் உள்ளே சென்றதும் மலைத்து விட்டோம். பிரம்மாண்டமான சிவலிங்கம். லிங்கத்தின் உள்ளே சிறு சிறு லிங்கங்கள். இறைவனின் திருநாமம், யோக சாஸ்திர சஹஸ்ர யோக லிங்கம் எனக் குறிப்பிடுகின்றார்கள். அற்புதமான திருவுருவம். நாங்கள் போன சமயம், சந்நிதியில், அபிஷேகப் பிரியரான எம்பெருமானுக்கு அபிஷேகங்கள் நடந்து கொண்டிருந்தன. ஆனந்தமாகத் தரிசித்தோம்.

'வேகம், வேகம்' என்ற கைடுப் பையனின் அவசரப்படுத்துதலுக்கு இடையே தான் தரிசனங்கள் செய்ய முடிந்தது. அவர் அவசரப்படுத்தியது எங்கள் நன்மைக்கே என்பதைப் பிறகு தான் உணர முடிந்தது.

அதன் பின் நாங்கள் சென்றது, புகழ்பெற்ற ஸ்ரீஹனுமான் கோவிலுக்கு. காணக் கிடைக்காத ஸ்ரீஹனுமானின் தோற்றம் அது. மிகப் பிரம்மாண்டமான ஹனுமான், படுத்திருக்கும் திருக்கோலத்தில் அருளுகிறார். ஸ்ரீஹனுமானின் விக்கிரகத்தின் நீள அகலங்கள் மிகப் பெரியது.  இந்த ஹனுமானின் திருநாமம் 'படே ஹனுமான் என்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் கங்கை கரை புரண்டு ஓடும் போது, ஸ்ரீஹனுமானின் கால்களை நனைக்கும் வரை நீர்ப்பிரவாகம் இருக்கும் என்கிறார்கள். செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீஹனுமானைத் தரிசிப்பது மிகுந்த நன்மையைத் தரும் என்கிறார்கள். வித வித டேஸ்ட்களில், லட்டு டப்பாக்கள் வாங்கி, ஸ்ரீஹனுமானுக்குப் படைத்து விநியோகம் செய்கிறார்கள். மெயினாக, எள் கலந்த லட்டு நிவேதிக்கப் படுகிறது.

படுத்த நிலையில் இருக்கும் ஸ்ரீஹனுமானைச் சுற்றி ஒரு தொட்டி போல் கட்டி இருக்கிறார்கள். க்ரில் அடைப்புகளைச் சுற்றி தரிசனம் செய்யலாம். காணிக்கைகளை ஸ்வாமியின் மேல் வீசிப் போடுகிறார்கள். அதைப் பூஜாரிகள் எடுத்துக் கொள்கிறார்கள்.  தரிசனம் துவங்கும் இடம் அல்லது முடியும் இடத்தில், நிற்கும் பூஜாரிகளிடம் நிவேதனப் பொருள் மற்றும் தக்ஷிணை கொடுத்தால் நிவேதித்துத் தருகிறார்கள்.

ஸ்ரீஹனுமானைத் தரிசனம் செய்து பிரார்த்தனைகள் செய்து கொண்டோம்.

கிட்டத்தட்ட, யாத்திரையில் நாங்கள் சென்ற எல்லாக் கோவில்களிலும், உண்டியல்களில் பணம்  போடுவதை பூஜாரிகள் விரும்பவில்லை. 'தக்ஷிணை கொடு' என்று வற்புறுத்துவதைப் பார்க்க முடிந்தது. குறைந்தது ரூ10/ வது கொடுத்தாக வேண்டும். சில இடங்களில் ரொம்பவும் கடினமாக, 'தக்ஷிணை கொடுக்காவிட்டால் தரிசனப் பலன் குறையும்' என்று பயமுறுத்துகிறார்கள். தகுந்த படி சில்லறை மாற்றி வைத்துக் கொள்வது நல்லது.

அங்கிருந்து நேராக, சங்கம ஸ்நானத்துக்குப் புறப்பட்டோம். அது அடுத்த பதிவில்..... (தொடரும்).

வெற்றி பெறுவோம்!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

3 கருத்துகள்:

  1. pondicherryla irunthu kaasikku poga naangal oru travels kitta book panni irukkom. ungal thakaval mikaum payanullathaaka irukku.. melum seikkaram mudinga..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thanks for your comments and the interest shown in my writing and the blogspot. There are a lot to mention and write about Kasi Yathra. I will be writing about the same in the next 2 or 3 episodes. keep visiting and recommend your friends to visit my blogspot. thanks once again.

      நீக்கு
  2. அருமை. முக்கியமான முன்னெச்சரிக்கையாக Knee cap பற்றி சொல்லியுள்ளது மிகச்சிறப்பு. பகிர்வு நன்றிகள்..

    பதிலளிநீக்கு