வெள்ளி, 26 ஏப்ரல், 2013

KASI YATHRA..... PART 7, காசி வந்தாச்சு...(காசி யாத்திரை.. பகுதி 7).



முந்தைய பதிவின் தொடர்ச்சி....

சித்ரகூடம், நைமிசாரண்ய யாத்திரை மிக அதிக தகவல்களை உள்ளடக்கி இருப்பதால், அதை பின்னொரு சமயம் தனித் தொடராகத் தருகிறேன். இந்தப் பதிவில் நாம் நேரடியாகக் காசிக்குச் சென்று விடலாம்(ஓகேவா எஸ்.வி.இராமகிருஷ்ணன் சார் !!!).

காசி மாநகரம்....

இப்படித்தான் எனக்கு வர்ணிக்கத் தோன்றுகிறது. நான் படித்த புத்தகங்கள், பார்த்த திரைப்படங்கள், புகைப்படங்கள் இவற்றிலிருந்தெல்லாம், நான் காசி நகரைப் பற்றிய வேறொரு பிம்பத்தையே என் மனதுள் உருவாக்கி வைத்திருந்தேன். அவையெல்லாம், காசி மாநகரை அடைந்த உடனேயே மாறிப் போயின.

இதிகாசம், புராணம், சரித்திரம் இவற்றிலெல்லாம் போற்றிப் புகழப்படும் மிகப் புராதானமான, தெய்வீகம் வாய்ந்த் காசிமாநகரை நாங்கள் அடையும் போது நள்ளிரவு இரண்டு மணி. நேராக, நாங்கள் தங்க வேண்டிய இடம் சென்றோம். அழைப்பு மணியை அழுத்தி விட்டுக் காத்திருந்தோம். கதவு திறந்தது.  திறந்த நபர்... வேறு யாருமில்லை. என் கணவரேதான். சென்னையிலிருந்து நேராக காசிக்கு வந்தவர், எங்களுக்கு முன்பாகவே வந்து விட்டிருக்கிறார்.

உடனடியாக, மறு நாள் 'ப்ரோக்ராம்' எங்களுக்கு அறிவிக்கப்பட்டது. 6 மணி சுமாருக்கு எழுந்து, குளித்து, தயாராக வேண்டும். ரூமிலேயே குளிக்க விரும்பினால் குளிக்கலாம். 8 மணிக்கு, சாஸ்திரிகள் வீட்டுக்குப் போக வேண்டும்.

இருந்த அசதியில், எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளை விரைவாக அடைந்து உறங்கத் தொடங்கினோம்.

மறுநாள் காலை.

காசியின் தெருக்களில் ஒன்று.
வெளிச்சத்தில், காசி மாநகர் மிக அழகாகவே தெரிந்தது. தொண்ணூறு சதவீதம் நகர் அமைப்பு மதுரையை ஒத்திருக்கிறது. 'சந்து சந்தா இருக்கும், கொஞ்சம் தவறினா வழி தெரியாது, ஒரே மாடு, சாணி' என்றெல்லாம் எனக்குத் தெரிவிக்கப்பட்ட தகவல்களில் உண்மையிருந்தாலும், நகர் மொத்தமும் அதுவல்ல. நேர்க்கோட்டில் பிரியும் தெருக்கள், ஒவ்வொரு தெருவிலும், மிக உயரமான நேர்த்தியான கட்டிடங்கள், தெருவுக்கு இரண்டு கோயில்கள் என எல்லாமும் இருந்தன.

நாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு அருகில் இருந்த டீக்கடையில், மிக அன்பாகத் தேநீர் தந்தார்கள். காபியும் உண்டு. மண் குவளையில் காபி, டீ கேட்டால் அதுவும் உண்டு. 'பை டூ' கேட்டதற்கும் கோபித்துக் கொள்ளவில்லை. மழலைத் தமிழில் பேசி அருமையாக உபசரித்தார்கள். நாம் ஏதேனும் தகவல் கேட்டாலும் தருகிறார்கள்.

நாங்கள் டீ சாப்பிடுவதைப் பார்த்து, பின்னாலேயே ஒரு சாமியார் வந்து, 'எனக்கும் டீ சொல்லு' என்றார். காசியில் இது சகஜம். சொன்னோம். குடித்து விட்டு,  ஒரு பாட்டுப் பாடி(என்ன பாஷை?) வாழ்த்தி விட்டுச் சென்றார்.

அறையில் குளிப்பவர்கள் அறையில் குளித்துத் தயாராக, நான் என் கணவர் சொற்படி கங்கையில் குளிக்கத் தயாரானேன். சின்ன மஞ்சள் பொடி டப்பா, துண்டு சகிதம் கிளம்பினோம். டீக்கடையில் வழி கேட்டுக் கொண்டோம். சின்னச் சின்ன சந்துகளின் வழியாக குமரகுருபர ஸ்வாமிகள் மடத்தை அடைந்து, அங்கிருந்து கங்கையை அடைந்தோம்.

முதன் முதலில் கங்கையைப் பார்த்த போது நிஜமாகவே பிரமிப்பாக இருந்தது. அகன்று விரிந்த கங்கை!!!! . நீர் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. பாவங்கள் போக்கும் கங்கா மாதாவைப் பார்த்த மாத்திரத்திலேயே மனம் பரிசுத்தமானது போல் இருந்தது. கங்கைவார் சடையோன் எனப் போற்றப்படும் சிவனாரின் சிரத்திலிருந்து பூமிக்குப் பாய்ந்தோடி வந்து, நம் ஜென்ம ஜென்மாந்திரப் பாவ மூட்டைகளை க்ஷணத்தில் அடித்துச் செல்லும் கங்கா மாதாவின் பெருங்கருணையிலும் மேலானதொரு பொருளில்லை என்று தோன்றியது.

'கேதார் காட்' (ஒவ்வொரு படித்துறைக்கும் இவ்வாறு பெயர் உண்டு. மொத்தம்   64 ஸ்நான‌ கட்டங்கள் ) படிகளில் இறங்கினேன். பெரிய பெரிய அகன்ற படிகள். வயதானவர்கள் இறங்கவென, ஓரங்களில் கொஞ்ச தூரம் வரை இரும்புக் கைப்பிடி போட்டிருக்கிறார்கள். மெல்ல இறங்கி  நீரில் காலை வைத்ததும் ஆனந்தமாக இருந்தது. கங்கை!!!. கொஞ்ச தூரம் இறங்கிச் சென்று, நானும் என் கணவருமாக ஸ்நானம் செய்தோம்.    பிறகு நான் மெல்ல படிகளின் மேலேறி நின்று சுற்றிலும் பார்த்தேன்.

கொஞ்ச தூரத்தில், பெண்கள் மட்டும் குளிக்கவென தனியிடம் கயிறுகள் மூலம் பிரிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அந்த இடத்தின் பக்கங்களில் போட் வைத்து மறைத்திருந்தார்கள்.  அங்கே கொஞ்சம் பேர் குளித்துக் கொண்டிருக்க, ஓடிப் போய் அவர்களுடன் குளிக்க ஆரம்பித்தேன். மனதில் இருந்த மகிழ்ச்சி மீதுற 'திவ்ய கங்கா தீர வாஸா' எனப் பாடியபடியே குளித்திருந்தேன். நேரம் போனதே தெரியவில்லை.  திடீரென ஒரு மூதாட்டி, 'அம்மாடி, செத்த மேல வந்துரு....அங்க பாரு என்னமோ மொதந்து வரது' என்றார். கொஞ்ச தூரத்தில், முழுக்க துணியால் போர்த்தப்பட்ட 'ஒன்று' மிதந்து வந்தது.  சட்டென்று படியேறினேன்.

மற்ற இடங்களில் பார்த்திருந்தால் என்ன தோன்றியிருக்குமோ தெரியாது. ஆனால் காசியில் பார்த்த போது மனம் சஞ்சலப்படவேயில்லை. பொதுவாக, காசிக்கென்று சில விதிகள் உண்டு.

காசியில்,பூ மணக்காது, பிணம் நாறாது, பல்லி கௌளி சொல்லாது, காக்கை கரையாது, கருடன் வட்டமிடாது. நாம் நடக்கும் போது கூடவே இறுதி ஊர்வலங்கள் வருவதும் போவதும் சகஜம். நம் மேல் பட்டால் கூட தோஷமில்லை  என்று பிற்பாடு  சாஸ்திரிகள் சொன்னார்.

ஸ்நானம் முடிந்து மேலேறி வந்தால் எல்லாரும் எனக்காக வெயிட்டிங்... சின்ன லெவலில் அர்ச்சனை வாங்கிக் கொண்டேன்.

ஒரு முக்கியமான விஷயம் இங்கு சொல்லியாக வேண்டும். காசியில் பித்ருகடன்கள் நிறைவேற்றும் தினங்களில் சாப்பாடு குறைந்தது மதியம் இரண்டு மணிக்குத் தான். வயதானவர்கள்,பசி தாங்காதவர்களானால், கையோடு க்ளூகோஸ் வைத்துக் கொண்டு கரைத்துக் குடிக்கலாம். ப்ளாஸ்க் இருந்தால் கடைகளில் வெந்நீர் வாங்கிக் கொண்டு, அதில் ஹார்லிக்ஸ் சேர்த்துக் குடிக்கலாம். கைக்குத்தல் அரிசியை வறுத்து மாவாக்கி, அதில் பால், சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம். வேறு வித சத்து மாவானாலும், கஞ்சி மாவானாலும், இன்ஸ்டன்டாக, வெந்நீரில் கரைத்துக் குடிக்கக் கூடிய விதத்தில் பக்குவம் செய்து, ஏர் டைட் கன்டெய்னரில் எடுத்துச் செல்லவும்(எறும்புகள் வராமல் இருக்கும்). இவற்றைக் கரைக்கப் பாத்திரங்கள் ஒன்றிரண்டு, டிஸ்போஸபிள் டம்ளர்கள் முதலியவற்றை எடுத்துச் செல்லவும்.

சாஸ்திரிகள் வீட்டில் எல்லாம் தயார் நிலையில் இருந்தன. வரிசையாகத் தம்பதிகள் அமர்ந்திருக்க, என் மாமனார் மாமியாரும் அவர்களுடன் சென்று அமர்ந்தனர். ஒவ்வொருவர் முன்னாலும் கலசம், பஞ்ச பாத்திரம் முதலானவை வைக்கப்பட்டிருந்தன. தான சாமான்கள்(பஞ்ச தானம், தச தானம் முதலானவை) ஒரு புறம் செட் செட்டாக வைக்கப்பட்டிருந்தன.

எல்லாவற்றையும் விட என் கவனத்தை ஈர்த்தது ஒரு விஷயம். நான் இது வரையில், தம்பதிகளாக அல்லது ஆண்கள்  மட்டுமே பித்ரு கடன்களை நிறைவேற்ற இயலும் என்று நினைத்திருந்தேன். ஆனால், அங்கு ஒரு பெண்மணி தனிமையாக அமர்ந்து சங்கல்பம் செய்து கொண்டிருந்தார். பிற்பாடு மெல்ல விசாரித்த போது, அந்த பெண்மணியின் கணவர் மறைந்து விட்டாரென்றும், ஒரே  பையனும் வெளிநாட்டுப் பெண்ணை மணந்து அங்கேயே செட்டிலாகி விட்டாரென்றும் தெரிந்தது. 'எங்காத்துக்காரர் இருக்கச்சேயே, பல தரம் சொன்னேன், ஒரு தடவையாவது காசிக்குப் போணுன்னு... அவர் போலாம், போலான்னே நாளைக் கடத்திட்டார், என்ன பண்றது?,  அவர், மத்த பெரியவாளெல்லாம் நல்ல கதிக்குப் போணுமோல்லியோ?' என்றார் கண்களைத் துடைத்தவாறே.

முதலில் சங்கல்பம் செய்து, பிறகு தானங்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு தானத்திற்கும் தனித்தனியாக வைதீகர்கள் வந்து வாங்கிக் கொண்டனர்.

அதன் பின் ஸ்நான சங்கல்பம்.  என்னையும் என் கணவரையும் பார்த்து,'நீங்களும் பண்ணுங்கோ' என்று சாஸ்திரிகள் சொல்லி விடவே நாங்களும் செய்தோம். அப்போது தான் தெரிந்து, பாவங்களில் எத்தனை வகைகள் என்று. சில விஷயங்களைப் பாவம் என்று தெரியாமலேயே செய்து கொண்டிருக்கிறோம் நாம். உதாரணமாக, குழந்தைகளை அடிப்பது. மிக நீளமாக, பஞ்ச மா பாதகங்களிலிருந்து ஆரம்பித்து, என்னென்ன விதம் உண்டோ அத்தனையும் சொல்லி, அத்தனையையும், ஸ்ரீவிசாலாக்ஷி உடனுறை, காசி விஸ்வநாதர் மன்னிக்க வேண்டும், கங்கா மாதா நிவர்த்திக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக்  கொண்டு சங்கல்பம் செய்தோம்.

அப்புறம், திரும்பவும் கங்கைக்குச் சென்று ஆனந்தமாக ஸ்நானம் செய்தோம். அதன் பின், என் மாமனார் மாமியார் உள்ளிட்ட தம்பதிகள் அனைவரும் திரும்பவும் சாஸ்திரிகள் இல்லத்திற்குச் சென்று, தீர்த்த ஸ்ரார்த்தம் செய்தனர். அதன் பின்னரே அன்று உணவு சாப்பிட்டோம்.

மாலையில் நீங்கள் சுற்றிப் பார்த்து வரலாம் என்று சாஸ்திரிகள் சொல்லிவிட்டார். பித்ருகடன்களை நிறைவேற்றுவோர், மறுநாள் காலை எட்டு மணிக்கு கங்கையில் குளித்து, ஈரத்துடன் தயாராக இருக்க வேண்டுமென்றும்  மோட்டார் படகு கரைக்கு வந்து அழைத்துச் செல்லும் என்றும் சொன்னார். படகிலேயே அடுப்பு, பாத்திரம், அரிசி முதலியவை இருக்கும் என்றும், படகிலேயே சமைத்து, சாத உருண்டைகள் தயார் செய்து, ஐந்து இடங்களில் பிண்ட பிரதானம் செய்ய வேண்டும் என்றும் சொன்னார். கிட்டத்தட்ட அரை நாள் ஈரத்தோடு இருக்க வேண்டும். கங்கையிலேயே படகுப் பயணம் வேறு. நடுவில் ஜூரம் வந்தால் கொடுக்க க்ரோசின் முதலியவை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்....(தொடரும்)

சிவனருளால்
வெற்றி பெறுவோம்!!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

4 கருத்துகள்:

  1. Thanks for
    So much of information

    subbu thatha.
    www.subbuthatha.blogspot.in

    பதிலளிநீக்கு
  2. Dear Mrs. Parvathy Ramachandran

    Have been checking your blog regularly for the articles. Just seen. Nicely written, presented lively with very useful information. Thanks a lot for kindly referring my name; really not necessary, but nice of you. Praying for your continued service through your blogs and writtings which help many immensely. Warm regards, Ramakrishnan s v

    பதிலளிநீக்கு
  3. நாங்களும் முதன் முதலாக இறங்கி ஸ்நானம் செய்தது கேதார் காட்டில் தான். பயங்கரமான இழுப்பி இருக்கும். மிகவும் ஜாக்கிரதையாகவே குளிக்கணும், படித்துறை அருகே ஓர் சிவலிங்க கோயில் கூட இருந்தது.

    காசிவிஸ்வந்தாரைப் பார்க்கப்போகும் வழியெல்லாம் ஒரே சந்து பொந்து ஜாஸ்தி. அதில் ஜாங்கிரி விற்பார்கள். காலங்கார்த்தாலேயே பல் தேய்க்கிற பக்ஷணம் போல ஜாங்கிரி சாப்பிடுவார்கள்.

    மாடுகள் எங்கு பர்த்தாலும் நின்று கொண்டிருக்கும். ரோட்டில் சந்துகளில் மாட்டுச் சாணி அதிகம். வழிக்கி விழாமல் நடந்து வரணும். ;))))))

    அருமையான தொடர். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. லெக்ஷ்மி வீரராகவன்17 ஜூன், 2015 அன்று PM 8:04

    அன்பு சகோதரிக்கு நன்றிகள் பல ..காசிக்கு போக நினைத்திருக்கும் எங்களுக்கு ஒரு வழிகாட்டி என்பதை விட வரப்ரசாதம் என்றே சொல்ல வேண்டும் .எல்லாம் விஸ்வநாதன் அருள் என்றே நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு