ஞாயிறு, 14 அக்டோபர், 2012

DHYANA SLOGAS FOR KANYA POOJA....கன்யா பூஜைக்கான‌ த்யான ஸ்லோகங்கள்

நவராத்திரி தினங்களில், பூஜை முடிந்த பிறகு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெண் குழந்தையை அம்பிகையாக நினைத்துப் பூஜிக்க வேண்டும்.  இரண்டு வயது முதல் பத்து வயது வரை உள்ள பெண் குழந்தைகளே இந்தப் பூஜைக்கு ஏற்றவர்களாவர். ஒவ்வொரு நாளும்,குமாரி (2 வயதுப் பெண் குழந்தை), திருமூர்த்தி (3 வயதுப் பெண் குழந்தை), கல்யாணி (4 வயதுப் பெண் குழந்தை), ரோகிணி (5 வயதுப் பெண் குழந்தை), காளிகா (6 வயதுப் பெண் குழந்தை), சண்டிகா (7 வயதுப் பெண் குழந்தை), சாம்பவி (8 வயதுப் பெண் குழந்தை), துர்க்கா (9 வயதுப் பெண் குழந்தை), சுபத்திரா (10 வயதுப் பெண் குழந்தை) என்ற திருநாமங்களால், ஒவ்வொரு பெண் குழந்தையைப் பூஜிக்க வேண்டும்.

குழந்தையை, கோலமிட்ட‌ மணைப்பலகை மீது அமர்த்தி, கால்களில் மஞ்சள் பூசி, நலங்கிட்டு, நெற்றியில் சந்தன,குங்குமத் திலகமிட்டு, பூ வைத்து,  இனிப்புப் பண்டங்களை உண்ணக் கொடுத்து, ஆடை, ஆபரணங்கள் வழங்கி மகிழ்விக்க வேண்டும். உணவளித்தல் சிறந்தது.  குழந்தையை தேவி ஸ்வரூபமாக எண்ணித் துதித்துப் பூஜிக்க வேண்டும்.
இவ்வாறு பூஜிக்கும் போது அவரவர் நாமங்களுக்கு மூல காரணமாயுள்ள  அம்பிகையைக் கீழ்க்கண்ட ஸ்லோகங்களால் தியானிக்க வேண்டும். இந்த ஸ்லோகங்கள், 'தேவி பாகவதத்தில்'இருக்கின்றன.

குமாரரூய ச தத்வானி யாரூருஜத்யபி லீலயா
காதிநபிச தேவாம்ரூதான் குமாரீம் பூஜயாம்யஹம் ||

குழந்தை விளையாட்டுப் போல், (அனைத்துலகங்களையும் ரட்சிப்பதை) யார் செய்கிறாளோ, பிரம்மாதி தேவர்கள், எந்தச் சக்தியின் லீலையால், சிருஷ்டி முதலானவைகளைச் செய்கிறார்களோ, அந்த சக்தியான குமாரியை நான் பூஜை செய்கிறேன்.

சத்யரதிபிரூ திரிமூர்த்திர் யாத்தர்ஹி நாநாரூவரூபிணி
த்ரிகால வ்யாபிநீ சக்திரூ திரிமூர்த்திம் பூஜயாம்யஹம் ||

சத்வம் முதலான முக்குணங்களால் அநேக ரூபங்களாகவும், சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்ற முத்தொழில்களைப் புரிபவளாகவும் விளங்கும் தேவி, காலை, நண்பகல், மாலை என்ற மூன்று காலங்களிலும் எந்தச் சக்தியாக வியாபித்திருக்கிறாளோ, அந்த சக்தியாகிய திருமூர்த்தியை நான் பூஜிக்கிறேன்.

கல்யாண காரிணீ  நித்யம் பக்தானான் பூஜிதாநிசம்
பூஜயாமி சதாம் பக்த்யா கல்யாணீம் சர்வகாமதாம் ||

பக்தர்களால் நித்தம் பூஜிக்கபடுபவளும், பக்தர்களுக்கு சகல மங்களங்களையும் அருளுபவளான கல்யாணியை நான் பூஜிக்கிறேன்.

ரோஹயந்தீச பீஜாநி பிராக்ஜன்ம சஞ்சிதாநிவை
யாதேவி சர்வபூதானாம் ரோஹிணீம் பூஜயாம்யஹம் ||

எல்லா உயிரினங்களின் பூர்வ கர்ம பாப வினைகளை, எந்த சக்தியானவள், நிவர்த்திக்கிறாளோ, அந்த சக்தியான ரோஹிணியைப் பூஜிக்கிறேன்.

காளிகாலயதே சர்வம் பிரஹ்மாண்டம்ஸ‌ சராசரம்
கல்பாந்ந சமயேயாதாம் காளிகாம் பூஜயாம்யஹம் ||

பிரளயகாலத்தில், அண்டங்கள் அனைத்தையும் எந்தச் சக்தியானவள் சம்ஹரிக்கிறாளோ, அந்த சக்தியான, காளிதேவியைப்  பூஜிக்கிறேன்.

சண்டிகாம் சண்ட ரூபாஞ்ச சண்ட முண்ட விநாசிநீம்
தாம்சண்ட பாபஹரிணீம் சண்டிகாம் பூஜயாம்யஹம் ||

எந்தச் சக்தியானவள், சண்டமுண்டர்களை வதம் செய்து, மஹாபாதகங்களை நிவர்த்திக்கிறாளோ, அந்த சக்தியான, சண்டியை நான் பூஜிக்கிறேன்.

அகாரணாத் சமுத்பத்திர் யந்மயை: பரிகீர்த்திதா
யஸ்யாஸ்தாம் சுகதாம் தேவீம் சாம்பவீம் பூஜயாம்யஹம் ||

தேஜோரூபமான பரமாத்மாவின் இச்சையினால், எந்த சக்தியானவள், திருவுருவங்களைத் தரிக்கிறாளோ, சுகங்களைத் தருகிறாளோ, அந்த சக்தியான சாம்பவியைப் பூஜிக்கிறேன்.

துர்க்காத்ராயதி பக்தம்யா ஸதா துர்க்கதி நாசினீ
துர்ங்ஞேயா சர்வ தேவானாம் தாம் துர்க்காம் பூஜயாம்யஹம் ||

துர்க்கதியைப் போக்குகின்றவளும், தேவர்களாலும் அறிய முடியாதவளும், பக்தர்களை ரக்ஷிக்கின்றவளுமாய், எந்த சக்தியானவள் விளங்குகிறாளோ,  அந்த சக்தியான துர்க்கையை நான் பூஜிக்கிறேன்.

சுபத்திராணி ச பக்தானாம் குருதே பூஜிதாசதா
அபத்ரநாசிநீம் தேவீம் சுபத்திராம் பூஜயாம்யஹம் ||

தன்னைப் பூஜிக்கிறவர்களுக்கு, மங்களங்களைச் செய்து, அமங்கலங்களை எந்தச் சக்தியானவள் போக்குகின்றாளோ, அந்தச் சக்தியான சுபத்திரையைப் பூஜிக்கிறேன்.

குமாரியைப் பூஜிக்க தனலாபமும், திருமூர்த்தியைப்  பூஜிக்க வம்சவிருத்தியும், கல்யாணியைப் பூஜிக்க  வித்யையும், ரோகிணியைப் பூஜிக்க நோய் தீர்தலும், காளியைப் பூஜிக்க சத்ருவிநாசமும், சண்டிகையைப் பூஜிக்க  ஐஸ்வரியமும், சாம்பவியைப் பூஜிக்க போரில் வெற்றியும்,  துர்க்காதேவியைப் பூஜிக்க, செயற்கரிய செயலை செய்து முடிக்கும் வல்லமையும், இகபரசுகங்களும், சுபத்திரையைப் பூஜிக்க, எல்லா விருப்பங்கள் நிறைவேறுதலும் கிட்டும்.

ஒன்பது நாளும் தனித்தனியே ஒவ்வொரு குழந்தையைப் பூஜிக்க இயலாதவர்கள், ஒன்பதாவது நாளான மஹா நவமியன்றோ அல்லது ஐந்தாம் நாளான பஞ்சமியன்றோ, ஒன்பது குழந்தைகளை வைத்துப் பூஜிக்கலாம்.


நவராத்திரி தினங்களில் பெண்மையைப் போற்றும் விதமாக அமைந்துள்ள கன்யா பூஜையைச் செய்து, அம்பிகையை தொழுது,

வெற்றி பெறுவோம்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக