வியாழன், 25 செப்டம்பர், 2014

ஜெய் ஸ்ரீ துர்கா...1 (நவராத்திரி முதல் நாள்).

செஞ்சுடரும் சந்திரனும் இருவிழியாய் கொண்டவளே
வஞ்சமில்லா நெஞ்சினிலே வந்துதிக்கும் உமையவளே
வெஞ்சமரில் அசுரர்களை விரட்டியடித்தருள் செய்தாய்
தஞ்சமென்று வந்து விட்டோம் தாயே நீ காத்தருள்வாய்!

அண்ட பகிரண்டமெல்லாம்  படைத்தளித்த மா சக்தி!
தொண்டருனை கை தொழவே கருணை செய்யும் சிவசக்தி!
செண்டையொலி முழங்கிடவே சிம்ம மேறி  வந்திடுவாய்!!
தண்டையொலி செய்திடவே தாளிரண்டைத்  தந்திடுவாய்!.

குங்குமத்தில் ஒளி தருவாய் கொலுவிருந்து காத்திடுவாய்!
கங்கையினை சடையேந்தும் எம்பிரானின் பங்கிருப்பாய்!
செங்கமல பாதமதில் சிரம் வைத்தோம் வரமருள்வாய்
பங்கயக் கண் அம்பிகையே பரிந்தெனையே ஆண்டருள்வாய்!

பொல்லாத அசுரர் குலம் நில்லாமல்  பொடி படவே
வில்லாலே கணை தொடுத்து வென்றெடுத்த‌ துர்க்கையளே
சொல்லாலே உனைத் துதித்தோம் சோகம் தீர்த்தருளிடுவாய்!
கல்லான உருவத்திலும் கனிந்தருளும் தெள்ளமுதே!

துக்கங்களை போக்கியருள் துர்க்கையுன்னை துதித்திடுவோம்!
பக்கம் வந்து கருணை செய்வாய் பைரவியே நலமருள்வாய்!
சொக்கத் தங்கம் போல என்னை மாற்றிய‌ருள் செய்திடுவாய்!
சொர்க்கமதை வேண்டவில்லை சுடரடிகள் வேண்டுகின்றேன்!

-----பார்வதி இராமச்சந்திரன்.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!

படத்துக்கு நன்றி; கூகுள் படங்கள்.

4 கருத்துகள்:

  1. ஜெய் ஸ்ரீ துர்கா
    துக்கங்களைத்துடைக்கும் துர்க்கை அன்னையின் புகழ்பாடும் அருமையான பகிர்வுகள்.பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. மனதிற்கு அமைதி தரும் மாதங்கி..
    செவ்வாய் மலர்ந்தருள் பூங்கொடி..
    செந்துயர் துடைக்கும் துர்காதேவி...
    அன்னைக்கு அருமையான பாமாலை சகோதரி...

    பதிலளிநீக்கு