வெள்ளி, 27 செப்டம்பர், 2013

MINI STORIES... ODUTHAL ENBATHU..சின்னஞ்சிறு கதைகள்... ஓடுதல் என்பது...


அதிகாலை இளங்காற்று என் மேல் வந்து மோதியது. ஷூ லேஸை இறுகக் கட்டினேன். 

தெரு விளக்குகள் வீசிய ஒளிவெள்ளம் தெருவெல்லாம் சிந்தியிருந்தது. கேட்டைத் திறந்து வெளிவந்தேன். இந்த அதிகாலை நேரத்தில், ஓரிருவர் வாக்கிங் சென்று கொண்டிருக்க, சிலர்  ஓடிக் கொண்டிருந்தார்கள்.  நான்  மெல்..ல ஓட ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்தேன்.

ஓடிக் கொண்டிருப்போரில் பலர் பழக்கம் ஆனவர்கள். புன்னகைத்தார்கள். பதிலுக்கு நானும்.

கொஞ்ச நேரம் ஓடினேன். ஒருவர் என்னைக் கடந்தார். மின்னல் வேகம்... அயர்ந்து போனேன். பார்த்தால் வயதானவர் போல் தெரிந்தார். ஆனாலும் அவர் வேகம் நம்ப முடியாததாக இருந்தது. எனக்குள் தீப்பொறி. 'இவரைக் கடந்து ஓட வேண்டும்'. தீர்மானித்ததும், வேகத்தை அதிகரித்தேன். புயலாக ஓட ஆரம்பித்தேன்.

சிறிது நேரத்திலேயே அவருக்கு அருகில் வந்து விட்டேன். இன்னும் கொஞ்சம்...கொஞ்ச்..சம் தூரம் தான். ஆ!... இதோ.. இதோ அவரை அடைந்தே விட்டேன். இன்னும்..இன்னும் வேகம்.. தாண்டியே விட்டேன் அவரை.

அவரை விட்டு வெகு தூரம் விலகி வந்த பின்பு மெல்ல நிதானித்தேன். குனிந்து மூச்சை ஆழமாக உள்ளிழுத்து வாயால் வெளிவிட்டேன். வென்று விட்ட பெருமிதம் மனதை நிறைக்க, மெல்ல திரும்பிப் பார்த்தேன். எந்த வித சலனமும் இல்லாமல் அந்த மனிதர் என்னைக் கடந்தார். அவருக்கு நான் அவரோடு போட்டியிட்டது கூடத் தெரியவில்லை.. பாவம்.

சுற்றும் முற்றும் பார்த்தேன். 'திக்' கென்றது. இது எந்த இடம்?. அருகிலிருந்த பலகை, மௌனமாக, 'நீ போக வேண்டிய இடத்திலிருந்து வெகு தூரம்..' என்றது. அதிர்ந்தேன்.. திரும்பவும் போக வேண்டும் வெகு தூரம். இப்போது மணி என்ன?. ஏழு என்றது கைக்கடிகாரம். அப்படியென்றால்.. திரும்பி ஓட இயலாது. வேக நடை நடந்து சென்றால் ஏழரை அல்லது ஏழே முக்கால் ஆகலாம். எட்டு மணிக்கு அலுவலகத்தில் இன்று இருக்க வேண்டும் என்பது திடீரென மனதில் பளீரிட்டது. முக்கியமான மீட்டிங். ஆறரைக்குக் குளித்துத் தயாராக வேண்டுமென நினைத்தது தேவையில்லாத போட்டியால் பாழானது புரிந்தது.

உண்மையில் நான் அடைந்தது வெற்றியல்ல. மோசமான தோல்வி.. வருத்தம் தோய்ந்த முகத்துடன், மெல்லத் திரும்பி நடக்கலானேன்..

கதை சொல்லும் நீதி:

நம்மில் பலர், இப்படித்தான் தேவையேயில்லாமல், உற்றார், உறவினர், நண்பர்கள், அண்டை வீட்டுக் காரன் என அனைவருடனும் போட்டியிடுகிறோம். மனதால் நித்தம் நித்தம் குமைந்து, 'அவன் என்ன உசத்தி.. என்னை விடவா' என்று ஒப்பிட்டு யுத்தம் செய்கிறோம். மனமென்னும்  கோயிலில் சத்தமில்லா யுத்தக் களங்கள் ஒரு நூறு கட்டி வைத்து ஓயாமல் மாற்றி, மாற்றிப் போரிடுகிறோம். ஏன் என்றும் புரியாமல், எதற்கு என்றும் தெரியாமல் அனைவரையும் விரோதியாகவே பாவிக்கிறோம். நம்மை விடவும் நல்ல கார் வைத்திருக்கிறானா, வீடு இருக்கிறதா, அட.. நம்மை விடவும் காஸ்ட்லி ஷர்ட்டா.. போச்சு.. உடனே காரணம் தெரியாத விரோதத் தீ பரவுகிறது. உண்மையான நட்புடன், நமக்கு ஆபத்தில் உதவி செய்யக் கூடிய சுபாவம் அவருக்கு இருந்தும், நம்மால் ஒட்ட முடியாமல் போகிறது.

ஆரோக்கியமற்ற இந்தப் போட்டி மனப்பான்மை, ஒரு முடிவற்ற சுழல். மாட்டிக் கொள்வோரை மாயமாக்கி  விடும் தன்மையுடையது. நமக்கென்று இருக்கும் வாழ்வு, லட்சியம், கொள்கை அனைத்திலும் போக வேண்டிய நமது கவனத்தை, இவற்றில் சிதறச் செய்வது என்ன நியாயம்?. கடவுள் நமக்கே நமக்கென வகுத்து வைத்திருக்கும் பாதையில் நடை போட்டு உயராமல், அடுத்தவர் பாதையையே நாமும் தேர்ந்தெடுத்து ஓடுதல் என்ன பலன் தரும்?.

நம் முன்னோர்கள் இதனால் தான் 'அஞ்சு விரலும் ஒண்ணு போல் இருக்காது..' என்று  சொல்லிச் சென்றார்கள். பரந்த இப்பூவுலகில், ஒவ்வொரு படைப்பும் தனித்தன்மையுடையன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டால் யாருக்கு நட்டம்?.

ஒப்பீடு செய்யாமல், ஒழுங்காக நம் பாதையில் சந்தோஷமாகச் செல்வோம். அப்போது தான் அருகில் செல்பவரைப் பார்த்து புன்னகைக்கவும் வாழ்த்தவும் இயலும். அடுத்தவர் உயரம் ஆழ்மனது வரை பரவசப்படுத்தும் மனம் படைத்த பாக்கியசாலிகளாவோம்.

ஓவர் டோஸ் அட்வைஸாப்படுதா.. செரி.. கொஞ்சம் சிரீங்.

இப்படியெல்லாமும் போட்டி போடக் கூடாத்.. தப்..

(காணொளியை வலையேற்றியவருக்கு ரொம்ப தேங்ஸு..)

அன்புடன்,
பார்வதி இராமச்சந்திரன்.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்..

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

17 கருத்துகள்:

  1. பக்கத்து வீட்டில், எதிர்த்த வீட்டில், ஏதாவது ஒன்று வாங்கி விட்டால், அது நமக்குத் தேவையா இல்லையா என்பதை சிந்திக்காது,

    காசை,விரயம் செய்யும் வீணர்களுக்கு இந்த கதை நல்ல பாடம்.

    காணொளி மிகவும் ரசித்தேன்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப ரொம்ப நன்றி!. ஊக்கம் தரும் தங்கள் வார்த்தைகளே மேன்மேலும் இது போல் எழுதத் தூண்டுகிறது.

      நீக்கு
  2. நல்லதொரு மிகச்சிறந்த நீதிக்கதை. பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள்.

    காணொளி மிக அருமை. 10 முறை திரும்பத்திரும்ப பார்த்து மகிழ்ந்தேன்.

    http://gopu1949.blogspot.in/2013/09/56.html முடிந்தால் வாங்கோ. அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  3. // ஒவ்வொரு படைப்பும் தனித்தன்மையுடையன... //

    சரியாக... மிகச் சரியாக சொன்னீர்கள்...

    காணொளி அருமை...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. மனமென்னும் கோயிலில் சத்தமில்லா யுத்தக் களங்கள் ஒரு நூறு கட்டி வைத்து ஓயாமல் மாற்றி, மாற்றிப் போரிடுகிறோம்.
    வெற்றி தோல்வியற்ற வெறும் யுத்தம் ..!

    காணொளி ரசிக்கவைத்தது..!பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  5. ஆனால் நிர்வாக இயலில்/கார்பொரேட் குருமார்கள் ஆரோக்கியமான போட்டியை வலியுறுத்துகிறார்களே! நம்முடைய 'சுப்புகிராண்ட்பா'கூட‌ அப்படி நிறைய லெக்சர் அடித்த‌வர்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா!..தாங்கள் கூறுவது சரியே!. ஆனால் நான் ஆரோக்கியமற்ற , தேவையேயில்லாத போட்டியைப் பற்றி அல்லவா கூறியிருக்கிறேன்!.

      நீக்கு
  6. ஊரில் பெரும்பாலும் இப்படித்தான், வெட்டி ஈகோ சாதிப்பது ஒன்னுமில்லை, காலமும் நேரமும் விரயமாக்குவதோடு சரி. கண்டுகொண்டால் தான் வருத்தம் வரும் அந்த வயதானவர் போல் கண்டுக்காமல் விட்டுவிடால் இறுதி வெற்றி நமக்குத்தான்
    நல்லதொரு பகிர்வு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசித்து படித்தமைக்கும் ஊக்கமளிக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோதரரே!

      நீக்கு
  7. சுப்பு தாத்தா வலையிலிருந்து உங்கள் பக்கம் வந்தேன். வந்தால் ஓடி முடித்து , அழகாய் சொல்லிவிட்டீர்கள். வெற்றி எது தோல்வி எது என்பதை. அருமையாய் இருந்தது.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக!, வருக!. முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி!!. என் மற்றொரு வலைப்பூவான www.aalosanai.blogspot.in க்கும் வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

      நீக்கு
  8. மிக அருமையான விளக்கம். இரட்டை குழந்தைகள் போட்டா போட்டி வெகு அருமை.

    பதிலளிநீக்கு