சனி, 12 அக்டோபர், 2013

NAVARATHIRI KAVITHAIGAL ...2, நவராத்திரி கவிதைகள்‍‍‍ ---2, கும்மிப் பாட்டு..



இந்தப் பாடலை கீழ்க்கண்ட லிங்கில் உயர்திரு.சுப்பு தாத்தாவின் குரலில் கேட்டு ரசியுங்க... இதை அழகாகப் பாடி வலையேற்றிய சுப்பு தாத்தாவுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி. 

நான் மாடக் கூடலடி நாற்புறமும் கோயிலடி
கோயில் மாநகரினிலே குடியிருக்கும் அன்னையடி
ஸ்ரீசக்ர வடிவத்திலே திகழும் நல் மதுரையடி
சீருடனே மீனாட்சி அரசிருக்கும் பூமியடி

மானமுள்ள வைகையது  நடனமிடும் ஊரடியோ
மங்காத புகழுடனே மனங்கவரும் தேரடியோ
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த சான்றோர்கள் இடமடியோ
சங்கடங்கள் தீர்த்து வைப்பாள் சக்தியவள் குணமடியோ

சந்திரனை சிரமணிந்த சித்தரவர் தலமடியோ
சங்கரனார் மீனாட்சி கரம் பிடித்த நகரடியோ
பொற்றாமரை நடுவிருக்கும் பொலிவான குளமடியோ
பூத்திருக்கும் புன்னகையால் புவனமாளும் அழகடியோ

எழுகடலும் பொங்கி வந்து இருந்ததிந்த ஊரினிலே
எண்ணில்லா விளையாடல் நடந்ததிந்த நகரினிலே
 முக்குறுணி முன்னவனும் உக்கிரனான் இளையவனும்
மட்டில்லா மகிழ்வுடனே  திகழ்ந்திடுவார் பாங்கியரே

கும்மியடி கும்மியடி குதித்தாடி கும்மியடி
சொக்கேசர் பாகங் கொண்டாள் புகழைப் பாடி கும்மியடி
ஊரழகும் தேரழகும் உரக்கச் சொல்லிக் கும்மியடி
உலகை வெல்லும்  மீனாளின் விழிகள் போற்றிக் கும்மியடி

பொம்மியம்மா மனங்கவர்ந்தான் பேரைச் சொல்லி கும்மியடி
கொடி மரத்தில் நின்றிருப்பான் வீரம் சொல்லிக் கும்மியடி
கண்ணகியாள் சிலம்பெறிந்த கதையைச் சொல்லிக் கும்மியடி
கரங்களிலே வளையொலிக்க கவி பாடிக் கும்மியடி.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்

10 கருத்துகள்:

  1. கும்மிப்பாட்டு மிகச்சிறப்பாக உள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள். மீனாக்ஷி அம்மன் படத்தேர்வும் அருமை ;)

    பதிலளிநீக்கு
  2. அருமையான பாட்டு சிறப்பு அம்மா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. நவராத்திரி பாடலை நானும் பாடி மன மகிழ்ந்தேன்

    இங்கு சற்று நேரத்தில் இடுகிறேன்.

    வரவும் . கேட்கவும்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com
    www.menakasury.blogspot.com

    பதிலளிநீக்கு
  4. you can also listen to the song here:
    http://www.youtube.com/watch?v=O7PkmkL4Tek

    subbu thatha

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்டு ரசித்தேன் தாத்தா.. மிக அழகாக தாளத்தோடு அருமையாகப் பாடி அளித்திருக்கிறீர்கள். எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.

      நீக்கு